
உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜேர்மனியின் மிரோஸ்லொவ் குளோஸேயின் சாதனையை முறியடித்து, லியனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஒஸ்திரியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் விறுவிறுப்பான போட்டியில், தனது 17ஆவது உலகக் கிண்ண கோலை பதிவு செய்து அவர் இந்த வரலாற்றுச் சாதனையைத் தன்வசப்படுத்தினார்.
இந்த நடப்பு 2026 உலகக் கிண்ணத் தொடரில், ஆர்ஜென்டினா அணியின் தலைவரான மெஸ்ஸி அடிக்கும் 4ஆவது கோல் இதுவாகும்.
சாதனையைத் தேடித்தந்த ‘அழகிய’ கோல்!
ஆர்ஜென்டினா அணியின் மிக நேர்த்தியான பந்துப் பரிமாற்ற ஆட்டத்தின் மூலம் இந்த கோல் உருவானது. மெஸ்ஸியே இந்தத் தாக்குதலைத் தொடங்கி வைத்தார். பின்னர் எதிரணி வீரர்களின் தற்காப்பை மீறி, பெனால்டி பகுதிக்குள் யாருடைய கண்காணிப்பும் இன்றித் தயாராகக் காத்திருந்தார். அப்போது சக வீரர் பகுண்டோ மெதினா மைதானத்தின் தரைவழியாகக் கொடுத்த பந்தை, மெஸ்ஸி முதல் தொடுதலிலேயே மிக லாவகமாக உதைத்து கோல் கம்பத்தின் கீழ் மூலைக்குள் செலுத்தினார்.
அடுத்த சுற்றுக்கு முன்னேறும் ஆர்ஜென்டினா
குழு ஜேயில் இடம்பெற்றுள்ள ஆர்ஜென்டினா அணிக்கு, இந்த கோல் ஒஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் பெரும் முன்னிலையைத் தந்தது. தனது முதல் லீக் போட்டியில் அல்ஜீரியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்த தென் அமெரிக்காவின் பலம் வாய்ந்த ஆர்ஜென்டினா அணி, இப்போட்டியின் மூலமாக அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

