Tamilnadu
oi-Vishnupriya R
தென்காசி: குற்றால அருவியில் ஹாயாக குளித்து உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை பெறலாம் என போனால் அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது நீர் வீழ்ச்சியில் பாம்பு ஒன்று அடித்துக் கொண்டு வந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றாலத்திற்கு போயிருக்கிறீர்களா? அங்கு அருவிகளில் “சில்லென்ற சாரல்… ஆர்ப்பரிக்கும் அருவி… ஆனந்தக் குளியல்…” – இதுதான் நம் நினைவுக்கு வரும். அங்கு பிரஷ்ஷாக பிடித்த மீன்களில் வைக்கப்படும் குழம்பு, வறுவல் இவையும் பேமஸ்தான்.

அத்துடன் மீன் பிடிக்காதவர்களுக்கு சிக்கன், மட்டன் உள்ளிட்டவைகளும் சமைத்து தருகிறார்கள். சைவ சாப்பாடு கேட்டாலும் அங்கிருக்கும் பெண்கள் சமைக்கிறார்கள். இவர்கள் மிக்ஸியில் மசாலாக்களை அரைக்காமல் ஆட்டுக்கல்லில் அரைப்பதால் அவர்கள் வைக்கும் குழம்பு ருசியாக உள்ளது.
அருவியில் குளித்துவிட்டு வந்து தலைவாழை இலையில் சுடச்சுட ருசியான இந்த சாப்பாட்டை சாப்பிடுவது அமிர்தமாக இருக்கும். ஆனால், நேற்று ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளுக்குக் காத்திருந்தது ஒரு ‘திடுக்கிடும்’ சர்ப்ரைஸ்! ஆம், வானத்திலிருந்து தண்ணீர் விழுவதற்குப் பதிலாக, உயிருள்ள பாம்பு ஒன்று ஒருவரின் தலையிலேயே விழுந்த சம்பவம் ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் அதிர வைத்துள்ளது.

நடந்தது என்ன?
நேற்று மாலை, ஐந்தருவியில் மிதமான தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளதால், குடும்பம் குடும்பமாகச் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருவியின் மேலிருந்து திடீரென சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு பாம்பு, குளித்துக் கொண்டிருந்த ஒரு நபரின் தலையில் ‘தொப்’பென விழுந்தது.
முதலில் ஏதோ செடி அல்லது மரக்கிளை விழுந்ததாக நினைத்த அந்த நபர், தன் தலையில் ஏதோ நெளிவதைக் கண்டு திடுக்கிட்டுப் பார்த்தார். அது ஒரு பாம்பு என்பதை உணர்ந்த அடுத்த நொடி, அவர் போட்ட அலறல் சத்தம் அருவிச் சத்தத்தையும் மீறி எதிரொலித்தது. இதைப் பார்த்த மற்ற சுற்றுலாப் பயணிகளும் “பாம்பு… பாம்பு…” என கத்தியபடி தண்ணீருக்குள்ளேயே சிதறி ஓடினர்.
லாவகமாகப் பிடித்த தீயணைப்புத் துறை
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அங்கிருந்த பாறை இடுக்குகளுக்குள் நுழைய முயன்ற அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்தனர். அது விஷமற்ற பாம்பு என்பது தெரிந்த பின்னரே அங்கிருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பின்னர் அந்தப் பாம்பு பாதுகாப்பாக அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது. அருவிகளில் இது போன்ற விசித்திரமான மற்றும் அச்சமூட்டும் சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதோ சில அதிர வைக்கும் முந்தைய நிகழ்வுகள்:
குற்றாலத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு (2023): கடந்த ஆண்டு ஜூலை மாதம், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம் அதிகரித்தபோது, மேலிருந்து ஒரு ராட்சத மலைப்பாம்பு தண்ணீரோடு அடித்து வரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்போது குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாறையில் சிக்கிக் கொண்ட அந்தப் பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

ஆனைவாரி அருவியில் சிக்கிய தாய் – சேய் (2021): சேலம் மாவட்டம் ஆனைவாரி முட்டல் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் ஒரு தாயும் குழந்தையும் பாறையின் நடுவே சிக்கிக் கொண்டனர். வனத்துறையினர் கயிறு கட்டி அவர்களை மீட்ட அந்த வீடியோ அப்போது இணையதளங்களில் வைரலானது.
அகஸ்தியர் அருவியில் குரங்குத் தொல்லை: பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்கும் பயணிகளுக்குப் பாம்புகளை விடப் பெரிய தொல்லை குரங்குகள்தான். சுற்றுலாப் பயணிகளின் பைகளைத் தூக்கிச் செல்வது, தலையில் ஏறி அமர்வது என இவை செய்யும் சேட்டைகள் சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிவதுண்டு.

