நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை விசாரணைகளுக்காக அழைக்கக்கூட தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டையும் இனத்தையும் பாதுகாப்பதற்காக போராடிய தரப்பினரை ‘கறுப்பு அரசாங்கம்’ என சித்தரித்துவரும் தற்போதைய அரசாங்கம், தமக்கு ஆதரவளிக்கும் மோசடியாளர்களைப் பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரம் நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ‘ஜன சத்தன’ மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள்
அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

“அனுராதபுரத்தில் இருந்த லால் காந்த வேகமாக மூன்று மாடி வீடுகளை கட்டிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் ‘கறுப்பு அரசாங்கத்தின்’ ஒரு பகுதியல்ல.
கிரிப்டோ வசந்த போன்றவர்களும் கறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. தங்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள் எவரும் கறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பெற்றதாக முன்வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
அவ்வாறு பெறப்பட்ட பணத்துக்காக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடக்கில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்துக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக புலம்பெயர் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
