Last Updated:
வாராந்திர சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில், நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 04:20 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடையும்.
தமிழகத்தின் தென்கோடி நகரமான நாகர்கோவிலில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் (சார்லப்பள்ளி) வரை இயக்கப்படும் புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் (வண்டி எண்: 16357/16358) மார்ச் 11, 2026 அன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், மார்ச் 13 வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு முதல்முறையாக வந்த இந்த அதிநவீன ரயிலுக்கு, அப்பகுதி ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். டெல்டா மாவட்ட மக்கள் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு நேரடியாகச் செல்ல நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த ரயில் கும்பகோணம் தவிர தஞ்சாவூர், பாபநாசம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய முக்கிய நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
வாராந்திர சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில், நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 04:20 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடையும். மறுமார்க்கத்தில் சார்லப்பள்ளியில் இருந்து சனிக்கிழமை காலை 08:15 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 03:35 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.
அம்ரித் பாரத் ரயில்கள் நவீன வசதிகளுடன், குறிப்பாக எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ஏசி வசதி இல்லாத படுக்கை வசதி (Sleeper) மற்றும் பொதுப் பெட்டிகளைக் (General) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையங்களை மேம்படுத்தும் ‘அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின்’ கீழ் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருவதையும் ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.


