அம்பாங், தாமான் புத்ரா அம்பாங்கில் ஒரு வீட்டின் முன்புள்ள குப்பைத் தொட்டியில் ஒரு பெண் குழந்தை நேற்று கண்டெடுக்கப்பட்டது. அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் கைருல் அனுவார் காலித், மாலை சுமார் 6.27 மணியளவில் உள்ளூர்வாசி ஒருவரிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்துத் தனது துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.
சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு பிறந்திருக்கலாம் என நம்பப்படும் அந்தக் குழந்தை, இன்னும் உயிருடன் இருந்ததுடன், தொப்புள் கொடியும் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழந்தை அம்பாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது அது சீரான நிலையில் உள்ளதுடன், மருத்துவமனையின் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகிறது என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
தண்டனைச் சட்டத்தின் 317ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கில் காவல்துறை விசாரணைப் பத்திரம் ஒன்றைத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவுவதற்காக முன்வர வேண்டும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கூறினார்.




