புதுடெல்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர்அண்மையில் கூறுகையில், இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிஏஏ சட்டத்தின் அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை அது தவறானது என்று நினைக்கிறோம். அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை தவறான தகவல்களை அடக்கியுள்ளது. மேலும் அது தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம்.
சிஏஏ 2019 சட்டமானது, இந்தியாவின் உள்ளடக்கிய மரபுகள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டமானது, அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது.
2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.
இவ்வாறு ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.