Last Updated:
மத்திய அரசு, தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு காலநிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததோடு மட்டுமின்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது அவர் 90 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியது. இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் குடியரசுத் தலைவர் பிரதிவாதியாக இல்லாதபோது, குடியரசுத் தலைவரின் அதிகாரம் குறித்து, அவர் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எவ்வாறு இது போன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க முடியும் என்றும் வெங்கட் ரமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரம் கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், மாநில அரசின் மசோதாக்களை அங்கீகரிப்பதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் பங்கு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, காலாவதியான மசோதாவை சட்டமாக்க வழிசெய்து விடும் என தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி, மசோதாவை திருப்பி அனுப்பினாலோ அல்லது குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்பட்டாலோ அந்த மசோதா காலாவதியாகி விடும் என்றும் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்திருப்பதால் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
April 13, 2025 10:18 AM IST
குடியரசுத் தலைவருக்கு காலநிர்ணயம் செய்ததற்கு எதிராக விரைவில் சீராய்வு மனு – மத்திய அரசு திட்டம்


