Last Updated:
ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், நான்கு இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. குஜராத்தில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது.
குஜராத், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. அதில், ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் எதிர்க்கட்சிகளும், ஒரே ஒரு தொகுதியில் பாஜகவும் வென்றுள்ளது.
அதன்படி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி ஆதரவுடன் வெற்றி பெற்ற பி.வி.அன்வர், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதான் செளதக் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நஸிருதீன் அகமது உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அலிபா அகமது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 49 ஆயிரத்து 755 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 10 ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில், காடி மற்றும் விஸாவதர் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், காடி தொகுதி பாஜக எம்.எல்.ஏ கர்சான்பாய் சோலங்கி உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. இதேபோன்று விஸாவதர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பயானி பூபேந்திரபாய், தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், குஜராத் காடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்தர் குமார் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அதேசமயம், விஸாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் இட்டாலியா கோபால், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கீர்த்தி படேலை 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
June 23, 2025 6:42 PM IST


