குஜராத் ஆளுநர் ஶ்ரீ ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் குஜ்ராத் துணை முதலமைச்சர் ஶ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான பேராளர்கள் தமது இலங்கைக்கான விஜயத்தினை 2026 பெப்ரவரி 04 இல் ஆரம்பித்து 07 ஆம் திகதியன்று நிறைவு செய்தனர்.
கொழும்பில் உள்ள கங்காராமை விகாரையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச தரிசனத்துக்காக வருகைதந்த புனித தேவ்னிமோரி சின்னங்களுடன் இப்பேராளர்களும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இவ்விஜயத்தின்போது இப்பேராளர்கள் கௌரவ இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவை இலங்கை பாராளுமன்றில் சந்தித்து புனித சின்னங்களுக்கு வழங்கிய அன்பான வரவேற்புக்காக அவருக்கு நன்றியினைத் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனவி ஆகியோரையும் இப்பிரமுகர்கள் சந்தித்திருந்தனர். இச்சந்திப்புகளின் போது பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இவற்றுக்கு மேலதிகமாக, இலங்கையில் வாழும் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட சமூகத்தின் உறுப்பினர்களையும் அவர்கள் சந்தித்திருந்தனர். மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவராக இதில் இணைந்துகொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற “Friends of IBC Reunion” நிகழ்விலும் அவர்கள் கலந்துகொண்டிருந்தனர். மேலும், கொழும்பை சுற்றியுள்ள கலாசார மற்றும் பாரம்பரிய முக்கியத்துவமிக்க இடங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்யபிரதேஷின் ஆளுநர் ஶ்ரீ மங்குபாய் சி பட்டேல் மற்றும் அருணாச்சலப் பிரதேஷின் துணை முதல்வர் ஶ்ரீ சௌனா மெய்ன் ஆகியோர் தலைமையிலான பேராளர்கள் புனித தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனத்தை நிறைவுசெய்வதற்காகவும் அச்சின்னங்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுசெல்லும் பயணத்தில் இணைந்துகொள்வதற்காகவும் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.

