Last Updated:
லாவோஸ் சைசோம்பூன் குகையில் தங்க வேட்டையில் சிக்கிய 7 பேரில் 5 பேர் 10 நாள் போராட்டத்துக்கு பின் சர்வதேச டைவர்களின் உதவியுடன் மீட்பு, 2 பேரை தேடல் தொடர்கிறது
லாவோஸ் நாட்டில் தங்க வேட்டைக்குச் சென்றவர்கள் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கித் தவித்த நிலையில், 10 நாட்கள் போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டனர்.லாவோஸ் நாட்டில் சேறும், சகதியுமான குகையில் சிக்கி உயிருக்குப் போராடிய மேலும் நான்கு பேர் பாதுகாப்பாக மீட்டு வரப்பட்டுள்ளனர்.
லாவோஸ் நாட்டின் சைசோம்பூன் (Xaisomboun) மகாணத்தில் உள்ள குகைக்குள் தங்கம், அரியவகை கனிமங்கள் மற்றும் உணவுக்காக விலங்குகளை தேடி கிராம மக்கள் செல்வது வழக்கமாக உள்ளது.
அந்த குகைக்குள் தங்கம் தேடி 7 பேர், கடந்த 19 ஆம் தேதியன்று சென்றனர். சில மணி நேரத்தில் அந்த பகுதியில் கனமழை பெய்து குகைக்குள் இருந்து வெளியே வருவதற்கான பாதையை நீர் சூழ்ந்தது. இதனால், குகைக்குள் சென்றவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அவர்கள் தங்களை மீட்கக் கோரி வீடியோ வெளியிட்டிருந்தனர்.
அவர்களை மீட்கும் பணியில் லாவோஸ் மட்டுமின்றி தாய்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நீர் மூழ்கி வீரர்களும் ஈடுபட்டனர். தாய்லாந்து நாட்டில் 2018ஆம் ஆண்டு 12 பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கியபோது அவர்களை பாதுகாப்பாக மீட்பதில் முக்கிய பங்காற்றிய கெங்கச் பாங்காவோங்கும் இந்த மீட்பு பணியில் இடம் பெற்றிருந்தார்.
தொடர் தேடுதல் வேட்டையின் பலனாக குகையின் நுழைவாயிலில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஐந்து பேர் சிக்கியிருப்பது கடந்த புதன்கிழமை கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு வரும் பணியில் மீட்புக் குழுவினர் களமிறங்கினர். மிகவும் குறுகலான அமைப்பைக் கொண்ட குகையில் தொடர் தடைகள், வெள்ள நீர், இடிந்து விழும் அபாயங்கள் மற்றும் அசுத்தமான காற்றின் காரணமாக ஏற்படும் ஆபத்துகளை கடந்து சேறு நிறைந்த பாதையில் 5 பேரையும் மீட்டு வர வழிவகை செய்தனர்.
அதில், ஒருவர் வெள்ளிக்கிழமையன்று பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டார். மற்ற நான்கு பேரையும் சனிக்கிழமையன்று வெளியே மீட்டு வந்தனர். நான்கு பேரும் சேறு படிந்த உடையுடன், headlamp அணிந்தபடி குகையிலிருந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வெளியே வந்தனர். அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆரத்தழுவி கதறி அழுதது காண்போரை நெகிழச் செய்தது.
அதன்பின் நான்கு பேரும் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு, அலுமினிய போர்வைகளால் போர்த்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குகைக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குகைக்குள் தங்க வேட்டை… நொடி பொழுதில் மாறிய சூழல்… 10 நாட்களாக மரண விழும்பில் போராட்டம்


