கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதே ஆன இந்தியாவின் டி குகேஷ் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில் இவருக்கு எதிராக போட்டியிட்ட சீனாவைச் சேர்ந்த டிங் லிரன், வேண்டுமென்றே தோற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது இந்த தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் சீன கிராண்ட்மாஸ்டர்.
நடப்பு சாம்பியனாக இருந்த டிங், முக்கியத்துவம் வாய்ந்த 14-வது போட்டியில் மிகப்பெரிய தவறொன்றை செய்தார். இந்த தவறுதான் மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியனாவதற்கு குகேஷிற்கு காரணமாக அமைந்தது. குகேஷிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வேண்டுமென்றே போட்டியில் தோல்வியடைந்ததாக டிங் மீது ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இதுகுறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் விளாடிமிர் கிராம்னிக் ஆகியோரும் டிங் மற்றும் குகேஷுக்கு இடையே நடைபெற்ற 14-வது போட்டியில் சதுரங்கத்தின் தரம் குறித்து கேள்வி எழுப்பினர். இவ்வுளவு விமர்சனங்களுக்கு மத்தியில், டிங் தன்னையும் குகேஷையும் தற்காத்து கொண்டதோடு, தங்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுகளின் தரம் அவ்வளவு குறைவானதாக இல்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
“ஆமாம், நான் போட்டியில் என்னால் முடிந்தளவு வெற்றி பெற முயற்சித்தேன். எனது நேரத்தைப் பயன்படுத்துவதை நீங்கள் நன்றாக பார்க்க முடியும். எனக்குப் பழக்கமில்லாதபோது தொடக்க கட்டத்தில் அதிக நேரத்தைப் பயன்படுத்தினேன். என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். அல்லது இந்த புதுமையின் பின்னணியில் என்ன இருக்கிறது அல்லது எனது காயை எப்படி நகர்த்துவது என சிந்தித்தேன். சில நேரங்களில் எனக்கு இது உதவியாக இருந்தது. சில சமயங்களில் நான் ஒரு தெளிவான வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினேன்” என்று டிங்கூறியுள்ளார்.
“ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும், அவரது (குகேஷ்) நேரம் எனது நேரத்தை ஒத்தே இருந்தது. அவரும் பல சமயம் காயை நகர்த்துவதற்கு யோசனையோடு இருந்தார். எனவே நான் அதிக நேரம் செலவழித்தபோது சில உயர்தர நகர்வுகளை விளையாடினேன் என்று சொல்லலாம். ஆட்டத்தின் தரம் அவ்வுளவு ஒன்றும் கீழானதாக இல்லை. எனக்கு நேரம் குறைவாக இருந்தபோதும், நான் குறைந்த நேரத்தில் சில நல்ல நகர்வுகளை விளையாடினேன்” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், குகேஷ் 14வது மற்றும் கடைசி கிளாசிக்கல் டைம் கன்ட்ரோல் ஆட்டத்தில் வெற்றி பெற, அவரது சீன போட்டியாளரின் 6.5 புள்ளிக்கு எதிராக தேவையான 7.5 புள்ளிகளைப் பெற்றார். இந்தப் போட்டி பெரும்பாலும் டிரா நோக்கியே சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெற்றியாளராக மகுடம் சூடிய குகேஷிற்கு பரிசுத் தொகையாக 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.03 கோடி) வழங்கப்பட்டது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)