ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீவான டெர்னேட்டுக்கு அப்பால், வடக்கு மலுக்கா கடற்பகுதியில் ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலையில் 7.4 ரிக்டர் அளவிலான ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அண்டை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.
5 ரிக்டர் அளவு வரை உயர்வான பின் அதிர்வுகள் ஏற்பட்டதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், மேற்கு ஹல்மஹேராவில் 0.3 மீட்டர் உயரத்திலும், பிடுங்கில் 0.2 மீட்டர் உயரத்திலும் சுனாமி அலைகள் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு நிறுவனமான BMKG தெரிவித்துள்ளது. மனடோ பகுதியில் இடிபாடுகள் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், சேதமடைந்த கட்டிடங்களைக் காட்டும் காணொளிகளும் வெளியானதாகவும் இந்தோனேசிய ஒளிபரப்பு நிறுவனமான மெட்ரோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மனடோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது… ஒருவர் உயிரிழந்தார், ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று அதிகாரி ஜார்ஜ் லியோ மெர்சி ரண்டாங் AFP செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில்” உயிரிழந்தவர் புதைக்கப்பட்டிருந்தார் என்றும் அவர் கூறினார். வரலாற்று சிறப்புமிக்க மசாலா தீவுகளான டெர்னேட் மற்றும் டிடோர் போன்ற சில நகரங்களில் உள்ள பிராந்திய அரசாங்கங்கள், குடிமக்களை வெளியேற்றுவதற்குத் தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
உள்ளூர் நேரப்படி காலை 6.48 மணிக்கு, மொலுக்கா கடலில் 35 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று யு.எஸ்.ஜி.எஸ் (USGS) கூறியது. இதன் மையப்புள்ளி, 200,000-க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வடக்கு மலுக்குவில் உள்ள டெர்னேட்டிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் இருந்தது என்று அந்த அமைப்பு தெரிவித்தது. ஹவாயை தளமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடற்கரைகளில் “மையப்புள்ளியிலிருந்து 1,000 கி.மீ தொலைவிற்குள்” அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியது. குவாம், ஜப்பான், மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் கடற்கரைகளில் ஓத மட்டத்தை விட 0.3 மீட்டருக்கும் குறைவான உயரத்திற்கு அலைகள் ஏற்படும் அபாயம் குறித்தும் அது எச்சரித்தது.
சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், நாட்டிற்கு “பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு நிறுவனமான ஃபைவோல்க்ஸ் (Phivolcs) கூறியது. தற்போதைக்கு மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், நிலவரங்களைக் கண்காணித்து வருவதாகவும் மலேசியாவின் வானிலை ஆய்வுத் துறை ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரித்த ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம், ஜப்பானில் 0.2 மீட்டர் வரை உயரத்திற்கு அலைகள் ஏற்படக்கூடும்.




