ஷா ஆலம் | மார்ச் 30, 2026:
கிள்ளான், காப்பார் (Kapar) பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில், 69 வயது முதியவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 6:09 மணியளவில், பாதிக்கப்பட்ட முதியவரும் அவரது நண்பரும் உணவகத்தில் இருந்தபோது, ஒரு கும்பல் அவர்களை அணுகியுள்ளது. அந்த கும்பல் பேசிய சில கருத்துகளை முதியவர் கண்டுகொள்ளாமல் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பலில் இருந்த ஒரு நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முதியவரின் முகம் மற்றும் உடலில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த கும்பல், புகார்தாரரை விரைவில் சுட்டுக் கொன்றுவிடுவோம் எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளது என்று, வடக்கு கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி எஸ். விஜய ராவ் (ACP S. Vijaya Rao) கூறியுள்ளார்.
காயமடைந்த முதியவர் தற்போது கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா (HTAR) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அவர் உடல்நிலை சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதல் தொடர்பாகப் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஒரு சந்தேக நபரை ரகசியத் தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட நபருக்கு ஏற்கனவே 8 குற்றப் பின்னணிகளும், 3 போதைப்பொருள் தொடர்பான வழக்குகளும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது 3 நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள மற்ற இரு சந்தேக நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாகத் தண்டனைச் சட்டம் பிரிவு 324 (ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல்) மற்றும் பிரிவு 506 (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.




