Last Updated:
கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கடந்த 11 நாட்களாக உற்சாகமாக நடைபெற்று வந்தன.
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், 39 பதக்கங்கள் வென்ற இந்தியா பதக்கப்பட்டியலில் நான்காவது இடம்பிடித்தது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கடந்த 11 நாட்களாக உற்சாகமாக நடைபெற்று வந்தன. இதில், 171 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தையும், 110 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2ஆவது இடத்தையும், 62 பதக்கங்களுடன் கனடா 3ஆவது இடத்தையும் பிடித்தன.
இந்நிலையில், நடப்பு காமன்வெல்த் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்கள் வென்றது. இதன் மூலம் பதக்கப்பட்டியலில் 4ஆவது இடம்பிடித்த இந்தியா தனது பயணத்தை பெருமையுடன் நிறைவு செய்தது.
குறிப்பாக, குத்துச்சண்டை, தடகளம் மற்றும் பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, உலக அரங்கில் இந்திய வீரர்களின் திறனை பறைசாற்றியது. ஜூடோ, பளுதூக்குதல், குத்துச்சண்டைப் போட்டிகளில் இளம் வீரர்கள் பதக்கம் வென்று இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையை விதைத்துள்ளனர். நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்கள் வென்ற தென் ஆப்பிரிக்க நீச்சல் வீரர் சத் லே குளோஸ், மொத்தமாக 21 பதக்கங்களுடன் காமன்வெல்த் தொடரில் அதிக பதக்கங்கள் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அதேபோல, வேல்ஸ் நாட்டின் டிராக் சைக்கிளிங் வீராங்கனை எம்மா பினுக்கேன் 4 தங்கப் பதக்கங்கள் வென்று, ஒரே தொடரில் 4 தங்கம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார். இந்நிலையில், கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. நிறைவு விழாவில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா இந்திய கொடியை ஏந்தி சென்றார்.


