Last Updated:
முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட்டுகள் இழப்புக்கு, 152 ரன்கள் எடுத்தது.
வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் 3 சூப்பர் ஓவர்கள் வரை சென்ற ருசிகரம் ஸ்காட்லாந்தில் நடந்துள்ளது.
ஸ்காட்லாந்து – நெதர்லாந்து – நேபாள அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நெதர்லாந்து – நேபாளம் ஆடிய 2ஆவது போட்டி திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணி முதலில் பந்துவீசியது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய நேபாளம் 19 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 20 ரன்கள் நோக்கி ஆடிய நெதர்லாந்தும் 19 ரன்கள் எடுத்ததால், முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தது. இதையடுத்து போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது.
இரண்டாவது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து முதலில் விளையாடி 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்களை இலக்கை நோக்கி விளையாடிய நேபாளமும் 17 ரன்கள் எடுத்ததால் 2ஆவது சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது.
இதனால் இதுவரை இல்லாத வகையில், வரலாற்றிலேயே ஒரு போட்டி 3ஆவது சூப்பர் ஓவருக்கு தள்ளப்பட்டது. அப்போது முதலில் விளையாடிய நேபாளம் ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து வெறும் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெதர்லாந்து 6 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாமல் 3 சூப்பர் ஓவர்கள் விளையாடப்பட்டு, அதில் நெதர்லாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
June 17, 2025 2:00 PM IST


