Last Updated:
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுனைத் ஜாபர் கான், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடியபோது கடுமையான வெப்பநிலையால் களத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 40.
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கிரிக்கெட் வீரர் ஒருவர் களத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த வீரர் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஜுனைத் ஜாபர் கான். இவருக்கு வயது 40. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இவர், சனிக்கிழமை கான்கார்டியா கல்லூரி ஓவலில் ஓல்ட் கான்கார்டியன்ஸ் மற்றும் பிரின்ஸ் ஆல்ஃபிரட் ஓல்ட் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். இதில் ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்காக விளையாடியிருக்கிறார் ஜுனைத். சம்பவம் நடந்த நேரத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வானிலை மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ரமலான் மாதம் என்பதால், ஜுனைத் நோன்பு கடைபிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம், கிரிக்கெட் விளையாடுவதால் நாள் முழுவதும் தண்ணீர் குடித்ததாகவும் சொல்லப்படுகிறது. எனினும் கடுமையான வெயிலின் காரணமாக ஜுனைத் ஜாபர் கான் களத்தில் சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக விரைந்த மருத்துவர்களுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்றுள்ளனர். மருத்துவர்கள் ஜுனைத் கானுக்கு CPR செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அவரின் உயிரிழப்புக்கு கடுமையான வெப்ப நிலையே காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜுனைத் கான் ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப்பின் மதிப்புமிக்க உறுப்பினர் என்றும், அவர் ஓவலில் விளையாடும்போது மருத்துவ ரீதியாகப் பாதிக்கப்பட்டார்” என்றும் கூறியுள்ளது. மேலும், “மருத்துவர்களின் சிறந்த சிகிச்சைகள் அளித்த போதிலும், ஜுனைத் கான் துரதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவில்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணியினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுனைத் ஜாபர் கான், 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார். அங்கே தொழில் செய்துவந்த நிலையில், கிளப் அணிக்காகப் பங்கேற்று விளையாடியும் வந்திருக்கிறார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 19, 2025 12:51 PM IST


