கிரிக்கெட்ட விடுங்க.. தல தோனியோட புது பிஸ்னஸ் என்ன தெரியுமா? ஒரு பிளானோட தான் இருக்காரு..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இன்றும் கூட அவர் மைதானத்தில் இறங்கி விளையாட மாட்டாரா என ரசிகர்கள் ஏங்கி கொண்டு தான் இருக்கின்றனர். அந்த அளவுக்கு அவர் தனது திறமையினால் ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்து வைத்திருக்கிறார்.
தோனி கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதிலும் வல்லவர். எதிர்காலத்தில் சிறந்த வளர்ச்சி இருக்கும் என அவர் தீர்க்கமாக நம்பி முதலீடு செய்யும் தொழில்கள் எல்லாமே அவரது முடிவு சரியே என நிரூபித்துள்ளன. அந்த வகையில் அண்மையில் தோனி களமிறங்கி இருக்கும் ஒரு துறை சோலார் எனர்ஜி துறை.

தோனி வழக்கமாக கேமிங் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் முதலீடு செய்து வந்த நிலையில் தற்போது இந்திய ரூஃப்டாப் சோலார் துறையில் வளர்ந்து வரும் ‘சோலார் ஸ்கொயர்’ (SolarSquare) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்தியாவில் வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான சோலார் பேனல்களை அமைக்க அரசு ஊக்கத்தொகை தருகிறது. இதனால் மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு அதிகம். அந்த வகையில் வேகமாக வளர்ச்சி அடையும் துறையாக சோலார் எனர்ஜி துறை இருக்கிறது.
தோனி தனது குடும்ப அலுவலகமான ‘மைடாஸ் டீல்ஸ்’ (Midas Deals) மூலம் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளார். முதலீடு செய்ததோடு மட்டுமல்லாமல், சோலார் ஸ்கொயர் நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராகவும் தோனி செயல்படுவார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சோலார் ஸ்கொயர் நிறுவனம் சமீபத்தில் தனது சீரிஸ் சி நிதி திரட்டல் சுற்று மூலம் சுமார் 510 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளது. இதில் தான் தோனியும் முதலீடு செய்துள்ளார். லோயர் கார்பன் கேபிடல், ரெயின்மேட்டர் மற்றும் குட் கேபிடல் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவின் வீடுகளில் சோலார் மின்சக்தி சந்தை பெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மின்சார கட்டண உயர்வு, அரசு வழங்கும் மானியங்கள் ஆகியவை இந்த துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. தோனியின் இந்த முதலீடு, இந்தியாவின் சோலார் மின்சக்தி சந்தையின் எதிர்கால வளர்ச்சி மீதான அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தோனி இந்த ஆண்டில் மேற்கொள்ளும் மூன்றாவது ஸ்டார்ட்-அப் முதலீடு இதுவாகும். இதற்கு முன்னதாக, ஆடியோ என்டர்டெயின்மெண்ட் தளமான Kuku மற்றும் கேமிங் நிறுவனமான LightFury ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தார். ஏற்கனவே தோனி ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் , கார்ஸ் 24 ,HomeLane, Acko காப்பீடு நிறுவனமம் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார்.அந்த வகையில் சோலார் துறையில் முதன்முறையாக தோனி முதலீடு செய்துள்ளார். தற்போது தோனி சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவராக திகழ்கிறார்.

