Last Updated:
பொதுமக்கள் வழங்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் நம் நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் பெரிதும் வழிவகுக்கும்
மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சென்னை மண்டல அலுவலகமானது, அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டுக் கணக்கெடுப்பு, குடும்பங்களின் நிலம், கால்நடை விவரங்கள் மற்றும் கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் நிலை குறித்த என்எஸ்எஸ் 81-வது சுற்று கணக்கெடுப்பிற்கான மண்டல அளவிலான பயிற்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு சென்னை சாஸ்திரி பவனில் அமைந்துள்ள மண்டல அலுவலக வளாகத்தில் வரும் ஜூன் 11 முதல் 12-ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக, ஜெய்ப்பூரில் கடந்த மே 21, 22 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் பயிற்றுநர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மண்டல அலுவலகத்தின் கீழ் உள்ள வேலூர், கடலூர், புதுச்சேரி ஆகிய துணை மண்டல அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கும் இந்த மண்டல அளவிலான பயிற்சி மாநாட்டை சென்னை மண்டல அலுவலகத் துணைத் தலைமை இயக்குநர் திரு மனோகர் தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை மண்டல அலுவலக இணை இயக்குநர் டாக்டர் சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றவுள்ளார். இதன் தொழில்நுட்ப அமர்வுகளை உதவி இயக்குநர் திரு எஸ் சங்கர் கணேஷ், மூத்த புள்ளியியல் அலுவலர்கள் திரு ஏ கருணைமுருகன், திரு ஆஷிஷ் சர்மா ஆகியோர் நடத்தவுள்ளனர்.
இந்த ஆய்வானது இந்தியக் குடும்பங்களின் சொத்துக்கள், மூலதன உருவாக்கம், கடன் நிலைமைகள் குறித்த விரிவான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள விவசாயக் குடும்பங்களின் நில உடைமை, கால்நடை விவரங்கள், அவர்களின் மாதாந்திர வருமானம், செலவினங்கள் போன்ற பல்வேறு வாழ்வாதாரக் காரணிகளை மதிப்பிடுவதற்காக இக்கள ஆய்வு நடத்தப்படவுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த விரிவான தேசிய அளவிலான கள ஆய்வினை வரும் 2026 ஜூலை 1 முதல் 2027 ஜூன் 30 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் நாடு முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் கள அதிகாரிகளிடம் முறையான, உண்மையான விவரங்களை அளித்து, இந்தத் தேசிய ஆய்வுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் வழங்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் நம் நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் பெரிதும் வழிவகுக்கும்.
Jun 10, 2026 10:33 PM IST


