Last Updated:
மத்தியப் பிரதேசத்தில் கோபால் என்ற இளைஞரைத் தாக்கிய புலி, துர்கா பிரசாத் திவேதி என்ற நபரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள ஒரு கிராமத்திற்குள் புகுந்த புலி ஒன்று, ஒருவரைத் தாக்கியது. பின்னர், அது ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தது. இதனால் பயந்துபோன குடும்ப உறுப்பினர்கள், வீட்டின் மேற்கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், மஞ்சள் மற்றும் கருப்பு நிற கோடுகள் கொண்ட புலி ஒன்று வசதியாக கட்டிலில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
கிராமவாசிகளின் கூற்றுப்படி, கோபால் கோல் என்ற இளைஞரை அந்தப் புலி தாக்கியதுடன், ஒரே பாய்ச்சலில் அவரைக் கீழே தள்ளியது. இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பந்தவ்கர் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஒரு குழு, அந்த இளைஞரை மீட்டு, கட்னி மாவட்டத்தில் உள்ள பர்ஹி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கோபால் என்ற இளைஞரைத் தாக்கிய பின்னர், துர்கா பிரசாத் திவேதி என்ற நபரின் வீட்டிற்குள் புலி நுழைந்து, அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தது. இதனையடுத்து கிராம மக்கள் கடும் பீதியடைந்தனர். பயத்தின் காரணமாக பலர் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளில் ஏறிக்கொண்டனர்.
தகவலின்படி, கிராம மக்கள் காலை 10 மணியளவில் முதலில் புலியைக் கண்டனர். அப்போது அந்த புலியானது பன்பதா இடையக மண்டலத்திற்கு அருகிலுள்ள ஒரு பயிர் வயலின் எல்லையில் சுற்றித் திரிந்தது. புலியைக் கண்டவுடன் கிராம மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் நண்பகலுக்குள் புலி கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது.
இந்தப் பகுதியில் காட்டு விலங்குகள் அடிக்கடி காணப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கிராமவாசிகள் அவற்றை குச்சிகளைக் கொண்டு விரட்டுவார்கள். அதேபோல் தான் இப்பொழுதும், கிராமவாசிகள் புலியைச் சுற்றி வளைத்து காட்டுக்குள் திருப்பி அனுப்ப முயன்றனர். அப்போதுதான் புலி கோபாலைத் தாக்கியது.
இப்பகுதியில் இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை அல்ல. முன்னதாக, சில்ஹாரி கிராமத்தின் கடரியா ஹார் பகுதியில் காணப்பட்ட ஒரு பெண் புலி, டிசம்பர் 26 அன்று மீட்கப்பட்டு மாதவ் புலிகள் காப்பகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
2025ஆம் ஆண்டில் மட்டும் இம்மாநிலத்தில் 55 புலிகள் உயிரிழந்துள்ளன. இது ஒரே ஆண்டில் பதிவான மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த 55 புலிகளின் இறப்புகளில், 11 இறப்புகள் இயற்கைக்கு மாறானவை என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சுமார் 8 சம்பவங்கள் மின்சாரம் தாக்கியதாலோ அல்லது வேட்டையாடப்பட்டதாலோ நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவமானது வன விலங்கு பாதுகாப்புக்கும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் இடையே அதிகரித்துவரும் முரண்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
கிராமத்திற்குள் நுழைந்து ஒருவரை தாக்கிய புலி, வீட்டிற்குள் இருந்த கட்டிலில் அமர்ந்தது…! வைரலாகும் ஷாக் வீடியோ…


