ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் போலீசார் இடையே பயங்கர மோதல் நடந்துள்ளது. இதில் காவல் நிலையத்தில் நுழைந்து போலீசாரை தாக்கியதாக லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் என 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஜம்மு காஷ்மீர் அமைந்துள்ளது. இதனால் ராணுவத்தினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் தான் ஜம்ம காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள படாபோரா கிராமத்தில் வழக்கு ஒன்று தொடர்பாக போலீசார் ராணுவத்தை சேர்ந்தவரின் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை என்பது கடந்த 28 ம் தேதி நடந்தது. இந்த சோதனைக்கு பிறகு தான் ஜம்மு காஷ்மீரில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் போலீசாரை ராணுவத்தினர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவம் என்பது ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் நடந்துள்ளது.
அதாவது ராணுவத்தை சேர்ந்தவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய பிறகு ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் சோதனை நடத்திய போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளனர். மேலும் போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த ராணுவத்தினர் அவர்களை தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் கான்ஸ்டபிள் சலீம் முஸ்தாக் ஜாரூர் அகமது, இம்தியாஸ் அகமது மாலிக், ராயிஸ் கான் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அவைரும் காஷ்மீரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் ராணுவத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 லெப்டினன்ட் கர்னல் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என மொத்தம் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி மற்றும் போலீஸ் நிலையம் புகுந்து கடத்தல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே தான் இந்த தாக்குதலை முற்றிலுமாக ராணுவம் மறுத்துள்ளது. இதுபற்றி ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , ‛‛போலீஸ் மற்றும் ராணுவத்தினர் இடையே வாக்குவாதம் மற்றும் தாக்குதல் நடந்ததாக கூறும் செய்திகள் பொய்யானவை. ஆனால் காவல்துறை மற்றும் ராணுவம் இடையே பணி தொடர்பான விவகாரத்தில் மனஸ்தாபம் இருந்தது. இந்த பிரச்சனை பேசி சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே தான் இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் போலீஸ் நிலையம் செல்கின்றனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும் நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


