கோலாலம்பூர்,
கோலாலம்பூரில் கால்பந்தாட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் RM1 மில்லியன் நிதியுதவியை கோலாலம்பூர் கால்பந்தாட்ட சங்கத்திற்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

கோலாலம்பூர் கால்பந்தாட்ட சங்கத்தின் பொன்விழா (Golden Jubilee) நிகழ்வில் உரையாற்றிய அவர், “கால்பந்தாட்ட வளர்ச்சிக்காக நிதி மட்டும் போதாது. அதற்கேற்ற இடங்கள், பயிற்சி வசதிகள் மற்றும் பயிற்சி கல்லூரிகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்புகளும் கட்டாயம் தேவை,” என வலியுறுத்தினார்.

அத்துடன், கல்வி அமைச்சு மற்றும் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து கால்பந்தாட்டத்தை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“தேசிய கால்பந்தாட்டத்தின் தரத்தை உயர்த்த இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஆனால், அது அடிப்படையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்,” எனவும் அன்வார் கூறினார்.

மேலும், “ரசிகர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் , சில ரசிகர்கள் எல்லை மீறும் விதமாக நடந்து கொள்கிறார்கள். ஒரு அணியால் தோற்கடிக்கப்படுவதை விமர்சிப்பதோடு நிறுத்தாமல், அவமதிக்கும் செயல்பாடுகளுக்கும் சென்றுவிடுகிறார்கள். இது தவறு,” என்றார் பிரதமர்.
இதனை தவிர்க்க போலீசாரை கண்காணிக்க உத்தரவு வழங்கியுள்ளதாகவும், அனைத்து கால்பந்தாட்ட சங்கங்களும் விளையாட்டில் ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் பேணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




