இந்த விபத்தில் ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க, மற்ற 241 பேரும் பரிதாபமாக பலியானார்கள். மேலும், விமானம் ஒரு மருத்துவமனை விடுதியின் மீது மோதி விபத்துக்குள்ளானதால், அங்கு இருந்தவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்து திட்டமிட்ட சதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது பறவை மோதி விமானம் விபத்துக்குள்ளானதா எனும் கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று விமானம் விபத்து நடந்ததும், சம்பவ இடத்திற்கு இந்திய விமானத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இன்று விமான விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 1 கோடி விமான நிறுவனமான டாடா அறிவித்துள்ளது. மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி, இந்த விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யும் விமானத்தின் கருப்புப் பெட்டி இன்று பகல் வேளையில், மருத்துவ விடுதியின் மேற்கூரையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதில், விமான விபத்திற்கான முழு காரணமும் தெரியவரும். மேலும், இந்த விபத்து குறித்தான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட குஜராத் மாநிலத்தில் பிரபல ஆங்கில நாளிதழாக இருக்கும் ‘மிட் டே’ (Mid-Day) தந்தையர் தினத்திற்காக தனது முதல் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை நேற்றே வெளியிட்டிருந்தது. அதில், நண்பகல் வேளையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் போலவே காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த விளம்பரத்திலும் ஏர் இந்தியா நிறுவன விமானமே பயன்படுத்தப்பட்டிருந்தது.
எதார்த்தமாக காலை வெளியான நாளிதழில் அந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நண்பகல் வேளையில் நிதர்சனத்தில் அதேபோல் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
June 13, 2025 9:27 PM IST

