Last Updated:
மத்தியப்பிரதேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த அசம்பாவித சம்பவங்களால், 8 உயிர்கள் காவு வாங்கப்பட்டதன் பின்னணி என்ன?
மத்தியப்பிரதேச மாநிலத்தில் EV கார் சார்ஜ் ஏறும்போது தீப்பற்றி எரிந்ததால் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ பரவி, 8 பேரின் உயிரைப் பறித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த அசம்பாவித சம்பவங்களால், 8 உயிர்கள் காவு வாங்கப்பட்டதன் பின்னணி என்ன?
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அந்த மூன்று மாடிக் கட்டடம் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் அந்த அசம்பாவிதம் அரங்கேற ஆரம்பித்தது. கட்டடத்தின் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த EV கார் ஒன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்தது. அந்த காரில் திடீரென ஒரு தீப்பொறி எழுந்து வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த தீ கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. தீ விரைவில் கட்டடத்தின் அனைத்து மாடிகளுக்குப் பரவ ஆரம்பித்தது.
அப்போது ஒரு வீட்டினுள் மறுநாள் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றுக்காக LPG சிலிண்டர்களை வாங்கி வைத்திருந்தனர். வேகமாக பரவிய தீயால் அந்த சிலிண்டர்களில் ஒன்று வெடித்துச் சிதறி இருக்கிறது. இதனால், அந்த தீ மேலும் தீவிரமடைந்து அனைத்து மாடிகளையும் சூழ்ந்து கொண்டது. தீவிரமாக பரவிய தீ மின்சார அமைப்புகளை சிதைத்துவிட்டதால் அந்த கட்டடத்தில் மின் அமைப்பு செயலிழந்து போனது.
ஒவ்வொரு வீட்டின் கதவுகளிலும் மின்னணுப் பூட்டுகள் இருந்ததால், வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்களால் கதவைத் திறந்து தப்பிக்க முடியவில்லை. இதனால் வீடுகளுக்குள் புகை சூழ்ந்து அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட ஆரம்பித்தது. ஜன்னல்களிலும் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததால் அவர்களால் தப்பித்துச் செல்ல முடியவில்லை. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் இந்தூர் போலீசார் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். கதவுகள் லாக் ஆனதால் தீயணைப்புத் துறையினர் ஆரம்பத்தில் உள்ளே நுழைய சிரமப்பட்டனர்.
இருப்பினும், அவர்கள் விரைவில் கதவுகளை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து, உள்ளே சிக்கியிருந்த மூன்று பேரை காப்பாற்றினர். இவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னர், அடுத்தடுத்த வீடுகளுக்குள் நுழைந்தபோது, 7 பேரின் சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது.
FINAL DESTINATION ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போன்று, ஒரு சிறு தீப்பொறி, காரை தீப்பற்றி எரிய வைத்து, சிலிண்டரை வெடிக்க வைத்து, மின்சாரத்தை துண்டித்து, அதனால் வீட்டுக் கதவுகளில் எலெக்ட்ரிக் லாக் சிஸ்டம் செயலிழந்து, கடைசியில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தப்பிச் செல்ல வழியில்லாமல் உயிரைப் பறித்துச் சென்றுள்ளது. சொல்லி வைத்ததுபோல் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த அசம்பாவிதங்கள் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
காருக்கு சார்ஜ் ஏற்றும்போது தீப்பற்றி விபத்து… 8 பேரின் உயிரைப் பறித்த பரிதாபம்… பின்னணி என்ன…?


