Last Updated:
டெல்லியில் காதலியை கொலை செய்துவிட்டு, உடலை வீச இடம் தேடி மணிக்கணக்கில் காரில் சுற்றித் திரிந்த காதலன், நண்பன் காட்டிக் கொடுத்ததால் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
புதுடெல்லி தென்மேற்கு பகுதியில் உள்ள முனிர்காவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் 24 வயதான அனுராக். இவருக்கும் 18 வயதான கனிகா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கனிகா அனுராக்கின் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கனிகா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த அனுராக், ஆத்திரத்தில் அவரைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். முதலில் மரக் கட்டையால் தாக்கிய அவர், பின்னர் அறையில் இருந்த சிறிய மேசையை எடுத்து கனிகாவின் தலை, முகம் என கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த கனிகா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். கொலையைத் தொடர்ந்து, உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் தவித்த அனுராக், தனது நண்பரை தொடர்பு கொண்டு உடலை வீச உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பன், சம்பவ இடத்திற்கு வந்தபோது, ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்த கனிகாவின் உடலைப் பார்த்து வௌவௌத்துப் போனார்.
அருகில் வந்த அனுராக், உடலை காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று வீச வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. நண்பனை நம்பாத அனுராக், அவரது செல்போனை பறித்துக் கொண்டு, ஜே.என்.யூ. சாலை மற்றும் சஞ்சய் வனம் உள்ளிட்ட பகுதிகளில் நண்பனுடன் பல மணி நேரம் காரில் சுற்றித் திரிந்துள்ளார்.எந்த இடத்தில் சடலத்தை வீசுவது என அனுராக் இடம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், யாரிடமும் தகவல் தெரிவிக்க முடியாத நிலையில் நண்பர் தவித்துள்ளார்.
அதன்பின் தந்திரமாக தனது குடும்பத்தினரிடம் பேச வேண்டும் எனக் கூறி செல்போனை வாங்கிய நண்பர் 112 அவசர உதவி எண்ணிற்கு அழைத்து முழு விவரத்தையும் போலீசாருக்கு தெரிவித்து விட்டார். தகவல் கிடைத்த சில நிமிடங்களில் போலீசார் விரைந்து வந்து, நண்பரின் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அனுராக்கை கைது செய்தனர்.
அதன்பிறகு அவரது வாடகை வீட்டிற்கு சென்ற போலீசார், படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கனிகாவின் உடலை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், ரத்தக்கறை படிந்த உடைந்த மேசை, ஆணிகள் பொருத்தப்பட்ட மரக் கட்டை உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர்.
விசாரணையில் கனிகாவை மரக் கட்டை மற்றும் மேசையால் தாக்கி கொலை செய்ததாக அனுராக் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள கிஷன்கர் போலீசார், கொலைக்கான முழு காரணம் மற்றும் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். காதலியை கொன்று, உடலை மறைக்க முயன்ற சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Aug 05, 2026 10:26 PM IST


