கோத்தா பாரு | மார்ச் 31, 2026
மலேசியாவின் மானிய விலையிலான சமையல் எண்ணெயைக் காரின் உதிரி டயர் (Spare tyre) வைக்கும் பகுதியில் மறைத்து வைத்துத் தாய்லாந்திற்கு கடத்த முயன்ற பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மதியம் சுமார் 2:15 மணியளவில் ரந்தாவ் பாஞ்சாங் (Rantau Panjang) குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) அமலாக்க அதிகாரிகள் நடத்திய ஆபரேஷன் டிரிஸ் (Ops Tiris) சோதனையில், வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட ‘மஸ்தா 2’ (Mazda 2) கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
காரின் பின்பகுதியில் இருந்த உதிரி டயர் வைக்கும் இடத்தின் கீழ் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 51 கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 1 கிலோ எடையுள்ள பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் 227 ரிங்கிட் ஆகும். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று, கிளந்தான் மாநில KPDN துணை இயக்குநர் அஸ்வதி ஜாபர் கூறினார்.
அந்தப் பெண் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த மானிய விலைப் பொருட்கள் அவருக்கு எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
“மானிய விலைப் பொருட்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதையோ அல்லது கடத்தப்படுவதையோ அமைச்சகம் சகித்துக்கொள்ளாது. இதற்கு உடந்தையாக இருக்கும் மொத்த விற்பனையாளர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் எச்சரித்தார்.
இச்சம்பவம் குறித்து 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




