1923ல் அலப்புழா மாவட்டத்தின் பல்பாடம் என்ற கிராமத்தில் பிறந்து, நான்கு வயதில் தாய், 11 வயதில் தந்தை என மனிதனின் குழந்தைப் பருவத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய இருவரையும் இழந்து நின்றபோதும், தளராமல் வாழ்வின் தீப் பிழம்புகளை தாண்ட தனி மனிதனாக தனது வாழ்வைத் துவங்கியவர் அச்சுதானந்தன். அன்று முதல் தனது இறுதி மூச்சு வரை வாழ்வு முழுவதுமே போராட்டத்தால் நிறைந்தவர்.
தாய், தந்தை இருவரையும் இழந்த அச்சுதானந்தனால் தனது ஏழாம் வகுப்புக்கு மேல் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல், வறுமையில் இருந்தும் பசியில் இருந்தும் தப்பிக்க தனது மூத்த சகோதரர் பணி செய்துகொண்டிருந்த டெய்லர் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். வறுமை, பசி, பயம் அறியா வயது அனைத்தும், அச்சுதானந்தனை மிகவும் துடிப்பாக இயங்க வைத்தது.
வறுமையை மட்டுமே அடையாளமாகக் கொண்டு, போராட்ட உரிமையின் மூலம், வாழ்வின் பாதையை தேடும் தொழிலாளர்களுக்காக இயங்கிவந்த தொழிலாளர் அமைப்பில் தனது அரசியல் வாழ்வைத் துவங்கிய அச்சுதானந்தன் 1938ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். பின்னர் அங்கு ஏற்பட்ட கருத்து முரணால், தனது 17 வயதில், 1940ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்வில் தீவிரமாக இயங்கத் துவங்கினார்.
குட்டநாட்டில் நில உரிமையாளர்களால் பயங்கரமான சுரண்டலுக்கு ஆளான விவசாயத் தொழிலாளர்களிடையே பணிபுரிய அச்சுதானந்தன் நியமிக்கப்பட்டார். திருவிதாங்கூர் திவானுக்கு எதிரான புன்னப்ரா – வயலார் எழுச்சியில் தீவிரமாக செயல்பட்ட வி.எஸ். தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார். பின்னர் கைது செய்யப்பட்டு, கடுமையான காவல் சித்திரவதைக்கு ஆளானார். இந்த முதல் கைதை முதல் தனது வாழ்நாளில் சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையில் கழித்தவர் காம்ரேட் வி.எஸ்.
ஊழல் எதிர்ப்பு, பொதுவுடைமை, பெண் விடுதலை, விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவற்றிற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த அச்சுதானந்தன், தனது நேர்மை, சாதாரண வாழ்க்கை முறை, துணிச்சலான பேச்சு ஆகியவற்றால் மக்கள் மனதில் தனிப்பட்ட இடத்தைப் பெற்றவர்.
1952ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு தீவிரமாக செயல்பட்டுவந்தவர், 1964ல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு, CPI(M) அமைப்பு உருவானபோது, அதன் உருவாக்கத்தில் இருந்த 32 நபர்களில் வி.எஸ். அச்சுதானந்தனும் முக்கிய நபர்.
கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியில், பின்னர் மாநிலச் செயலாளர், பொதுச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தவர், 2006 கேரளா சட்டமன்றத் தேர்தலில் CPI(M) தலைமையிலான இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றபோது, மக்களுக்காகவே தனது போராட்ட வாழ்வை அற்பணித்த அச்சுதானந்தனின் வயது 82. 17 வயதில் தீவிர அரசியலுக்கு வந்த அச்சுதானந்தன் தனது 82வது வயதில் முதல்வராகப் பதவியேற்றார். இவரே கேரளாவிலும், இந்தியாவில் மிக மூத்த வயதில் முதல்வர் பதவியேற்ற நபர்!
ஒரு முறை மட்டுமே கேரளா மாநிலத்தை ஆண்டிருந்தாலும், ஊழல் ஒழிப்பு, ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் மூலம் கேரளா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அச்சுதானந்தன். கேரளாவில் 1992 முதல் 1996 வரை, 2001 முதல் 2006 வரை மற்றும் 2011 முதல் 2016 வரை என மிக அதிகமாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஒரே நபர் அச்சுதானந்தன்.
100 வயதைக் கடந்தும் அரசியலில் தீவிரமாக இயங்கிவந்த அச்சுதானந்தன் தனது 101வது வயதில் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டு இயற்கை எய்தினார்.
வி.எஸ். அச்சுதானந்தன் அரசியல் தலைவர் என்பதை தாண்டி, கேரள மக்கள் மனதில் ஊழலில்லா, நேர்மையான நிர்வாகத்தின் மாதிரியாக இருந்து வருகிறார். சமூகநீதியை உயர்த்தி வைத்தவர். புதிய தலைமுறையினருக்கு மக்கள் நல அரசியலை தன் மூலம் உணர்த்தியவர் காம்ரேட் வி.எஸ். அச்சுதானந்தன்.
July 21, 2025 6:34 PM IST
காம்ரேட் வி.எஸ். அச்சுதானந்தன்: தலைமறைவு வாழ்வு முதல் கேரளாவின் தலைமகன் வரை.. முடிவுற்ற போராட்ட வாழ்வு!

