திறமையான மற்றும் செயல்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாகக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.
முறையான முகாமைத்துவத்தின் மூலம் அதிக இலாபம் ஈட்டும் அரச நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டுமெனவும், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தைச் சந்தித்தால், அதில் முதலீடு செய்தவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். (a)


