காப்பீட்டுத் திட்டங்களை வடிவமைக்கும்போது மருத்துவர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என மலேசிய மருத்துவ சங்கம் (MMA) காப்பீட்டு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது. மேலும், குறைவான மதிப்பீடு செய்யப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் சிகிச்சை முடிவுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது. காப்பீட்டுத் திட்டங்கள் வணிகரீதியாக நிலைத்திருக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதை MMA தலைவர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு ஏற்றுக்கொண்டாலும், சுகாதாரப் பலன்கள் மருத்துவ ரீதியான பரிசீலனைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
வணிக ரீதியான நிலைத்தன்மை, மருத்துவப் பொருத்தத்தின் இழப்பில் அமையக்கூடாது. காப்பீட்டுத் திட்டங்களுக்குச் சிறந்த காப்பீட்டு கணிப்பு வடிவமைப்பு தேவை. சுகாதாரப் பலன்களுக்குச் சிறந்த மருத்துவ வடிவமைப்பு தேவை. ஒன்று மற்றொன்றிற்கு மாற்றாக அமைய முடியாது. மருத்துவ நிர்வாகம் வழிநடத்த வேண்டும். பெருநிறுவன நிர்வாகம் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக ஒரு பொது மருத்துவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் RM50 வரை வழங்கும் ஒரு காப்பீட்டுத் திட்டம் குறித்த, சுகாதார சிந்தனைக் குழுவான கோட்ப்ளூவின் (CodeBlue) அறிக்கையைத் திருநாவுகரசு மேற்கோள் காட்டினார். அந்தத் திட்டத்தின் பிரீமியம், RM3,000 கழிவுத்தொகையுடன், மாதத்திற்குச் சுமார் RM55 வரை குறைவாக இருக்கலாம். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முதன்மைச் சிகிச்சையைச் சேர்ப்பதை திருநாவுக்கரசு வரவேற்றாலும், பொது மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்துகளுக்கு RM50 என்பது மிகவும் குறைவான அளவுகோல் என்று அவர் கூறினார்.
சிலாங்கூரின் ஸ்கிம் பெடுலி சிஹாத் திட்டத்தில் ஆரம்பத்தில் RM50 வரம்பும், மடானி மருத்துவத் திட்டத்தில் RM60 வரம்பும் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். முதன்மைச் சிகிச்சைக்கான மதிப்பு குறைவாக இருப்பது குறித்து எம்.எம்.ஏ (MMA) கவலை தெரிவித்த பிறகு, இரண்டு வரம்புகளும் RM70 ஆக உயர்த்தப்பட்டன. எனவே, 2026-ல், RM50 ஏன் என்ற கேள்வி எழுகிறது என்பதை நாம் தீவிரமாகக் கேட்க வேண்டும். மீண்டும், பொது மருத்துவர் ஆலோசனை மற்றும் மருந்து ஆகிய இரண்டிற்கும் இது ஒரு அளவுகோலாக அமையும்என்று அவர் கூறினார்.
நோயாளிகள் தகுந்த சிகிச்சையை முன்கூட்டியே பெறுவதற்கு வழிவகுப்பதன் மூலம், சிக்கல்கள், தேவையற்ற அவசர சிகிச்சைப் பிரிவு வருகைகள் மற்றும் அதிக செலவு பிடிக்கும் மருத்துவமனை சிகிச்சைகள் ஆகியவற்றைக் குறைத்து, சுகாதாரச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் முதன்மை சிகிச்சையை வலுப்படுத்துவது உதவும் என்று திருநாவுகரசு கூறினார். எனவே, முதன்மை சிகிச்சையை, வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டிய மற்றொரு செலவாக மட்டும் பார்க்காமல், சுகாதார நிலைத்தன்மைக்கான ஒரு முதலீடாகப் பார்க்க வேண்டும்.



