கோடை விடுமுறை விட்டாச்சு என்று குழந்தைகள் வீட்டுக்குள்ளே முடங்கி செல்போனுக்கு அடிமையாகி இருக்கக்கூடிய சூழ்நிலையில், குழந்தைகளுக்கு மீண்டும் பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும் வகையிலான நிகழ்வு மதுரையில் நடைபெற்றுள்ளது.
மே 18ஆம் தேதி உலக அருங்காட்சியகத் தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் பல்லாங்குழி, நொண்டி, கிட்டிப்புள், கோலிக்குண்டு எனப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் 6 நாட்களாக நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இறுதி நாளான இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று கோலிக்குண்டு போட்டியை மும்முரமாக விளையாடினார்கள்.
இதையும் படிங்க: தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது சரியா…? தலைமுடியைப் பராமரிக்க சூப்பர் டிப்ஸ்…
இது குறித்து அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் மருது பாண்டி கூறுகையில், “கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கக் கூடிய முயற்சியில் இதனை ஆரம்பித்தோம். 6 நாட்களாக நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் ஆரம்பித்த முதல் நாளிலேயே வரவேற்பு மிகவும் அதிகமாக இருந்தது.
குறிப்பாக முதியவர்கள், பெரியவர்கள் அலைபேசியில் அழைத்து நாங்களும் கலந்து கொள்ளலாமா என்று கேட்டு இங்கு வந்து விளையாடும்போது அவர்களுக்கு ஏதோ ஒரு மன அழுத்தம் இருந்து, அதனை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்தப் போட்டி அமைந்துள்ளதாகத் தான் எனக்குத் தோன்றியது.
மேலூர், அழகர் கோவில் என மதுரையிலிருந்து தூரமாக இருக்கக்கூடிய பகுதியிலிருந்தும் மக்கள் வருவதைப் பார்க்கும் பொழுது அவர்களின் சிறிய வயதை நோக்கிச் செல்லக்கூடிய வகையில் இந்த விளையாட்டு இருந்திருக்கிறது எனப் புரிகிறது.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் கொட்டித் தீர்த்த கோடை மழை… ஒரே நாளில் 283 மி.மீ. மழைப்பொழிவு…
6 நாட்கள் நடந்த இந்த விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளில் நடந்த கோலிக்குண்டு போட்டியிலும் சிறியவர் பெரியவர் என அனைவருமே ஆர்வமாக விளையாடினார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களும் வழங்கப்பட்டு வந்தது.
இனிவரும் நாட்களில் இன்னும் நமது பாரம்பரியமான விளையாட்டுகளை மீட்டெடுக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட உள்ளோம். அதாவது நுங்கு வண்டி போன்ற பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிட்டு வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.
போட்டியில் கலந்து கொண்ட பாட்டி கூறுகையில், “நான் எனது 10 வயதில் இருக்கும் பொழுது இந்த விளையாட்டை விளையாடினேன். மீண்டும் எத்தனையோ ஆண்டுகள் கழித்து இந்த அனுபவம் கிடைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தினமும் வந்து கலந்து கொண்டு பரிசுகளை வாங்கும் பொழுது சிறு வயது தான் எனக்கு ஞாபகம் வருகின்றது. எனது பேரனுடன் குடும்பமாக வந்து இங்கே 6 நாட்களாக விளையாடி வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்…
பேரன் கூறுகையில், “சம்மருக்கு காந்தி மியூசியத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடப்பதாகக் கூறினார்கள் நானும் விளையாடி பார்ப்போம் என்று வந்தேன். இதற்கு முன்னாடி இந்தப் போட்டிகளை நான் விளையாடியது இல்லை. தற்பொழுது தான் முதன்முதலாக கோலிக்குண்டு விளையாடினேன், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பரிசையும் வென்று உள்ளேன். இதில் கோலிக்குண்டைக் குறிவைத்து அடிப்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)