Last Updated:
தெலுங்கானா செகந்திராபாத் ஜவாகர் நகர் இஷிகா காதலன் மவுந்தியுடன் தாய் அஞ்சுவை கொலை செய்து படுக்கை அறையில் புதைத்து விட்டு ஸ்கூட்டர் வழியாக போலீசால் சிக்கினார்.
தெலங்கானாவில், காதலுக்கு தடையாக இருந்த தாயை காதலனுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த மகள் ஓராண்டுக்குப் பின் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு ஒரு இடையூறு என்று வந்து விட்டால் பெற்ற தாயாவது, தந்தையாவது. யார் குறுக்கே வந்தாலும் கொன்று புதைத்து விட வேண்டியதுதான் என்ற மனநிலை தான் தற்போதைய இளைய தலைமுறையின் ரத்தத்தில் ஊறிய விஷயமாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தெங்கானாவில் அரங்கேறியுள்ளது. பெண் குழந்தை பெற்றுக் கொண்டால் கடைசி வரை பாசமாக பார்த்துக் கொள்வாள் என எதிர்பார்த்திருந்த தாயை தீர்த்துக் கட்டி வீட்டிலேயே புதைத்திருக்கிறார் பாசக்கார மகள். கேட்கவே நம்ப முடியாத சம்பவத்தின் கொடூர பின்னணி என்ன?.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ஜவாகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு. குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை பிரிந்த அஞ்சு தனது இரண்டு மகள்களுடன் வாடகைக்கு வீடு பிடித்து வசித்து வந்தார். அஞ்சு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி இரண்டு மகளையும் பராமரித்து வந்தார். இந்நிலையில் அவருடைய மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார்.
இரண்டாவது மகளான இஷிகா பிளஸ் டூ படித்து வந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் அவருக்கு இளைஞர் மவுந்தியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது மகளின் காதலை அறிந்த அஞ்சு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத இஷிகா- மவுந்தி ஜோடி காதல் வானில் சிறகடித்து பறந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அஞ்சு, மைனரான தன்னுடைய இளைய மகளுக்கு மவுந்தி காதல் தொல்லை கொடுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் மவுந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் தாய் அஞ்சு மீது இஷிகா கடும் கோபமடைந்தார். தாய் உயிரோடு இருக்கும் வரை தங்களுடைய காதல் கைகூடாது என்ற முடிவுக்கு வந்த இஷிகா தாய் என்றும் பாராமல் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக இஷிகா காதலன் மவுந்தியுடன் சேர்ந்து கொலைகான திட்டத்தை வகுத்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் இரவு நேரம் வீட்டில் அஞ்சு தூங்கிக் கொண்டிருந்தபோது தன்னுடைய காதலன் மவுந்தியை வீட்டுக்கு வரவழைத்தார் இஷிகா. இரண்டு பேரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அஞ்சுவை கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அஞ்சு உடலை வீட்டின் படுக்கை அறையில் போடபட்டிருந்த டைல்ஸ் கற்களை பெயர்த்து எடுத்து குழி தோண்டி புதைத்து மீண்டும் டைல்ஸ் கற்களை பதித்து தடம் தெரியாமல் மறைத்து விட்டனர்.
இதனை தொடர்ந்து தங்கள் மீது சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதற்காக இஷிகா தன்னுடைய தாயையும், அவர் வைத்திருந்த ஸ்கூட்டரையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இஷிகா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அஞ்சுவை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய தாய் வைத்திருந்த ஸ்கூட்டரை வேறு இடத்தில் பதுக்கி வைத்திருந்த இஷிகா அதை காதலன் மவுந்தி மூலம் ராஜ்புத் என்பவருக்கு விற்பனை செய்ய முயன்றார். அப்போது ஸ்கூட்டர் ஆர்.சி. புக்கில் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. காணாமல் போனதாக கூறப்பட்ட ஸ்கூட்டரை இஷிகா தரப்பு விற்பனை செய்ய முயற்சி செய்வதை அறிந்த போலீசார் இஷிகாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில்அனைத்து உண்மைகளையும் போலீசாரிடம் கூறி விட்டார் இஷிகா. இதனை தொடர்ந்து இஷிகா, அவருடைய காதலன் மவுந்தி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். காதலுக்கு இடையூறாக வந்ததால் பெற்ற தாயையே அடித்து கொலை செய்த பாசக்கார மகள் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தயிருக்கிறார்.
காதலுக்கு தடையாக இருந்த தாய்.. ஓராண்டுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த மகளின் கொடூர செயல்.. என்ன நடந்தது?


