ஆப்ரிக்காவில் காதலியை தேடி, முதலைகள் நிறைந்த நதியை நீந்தி கடந்து 2 ஆண் சிங்கங்கள் புதிய சாதனை படைத்ததை காட்சிப்படுத்தி உள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக தண்ணீரில் நடக்காத சிங்கங்கள், ஆபத்துகளுக்கு மத்தியில் நீந்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட கதையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
ஏழு மலை ஏழு கடல் தாண்டியாவது காதலியை சந்தித்துவிடுவது சங்க காலந்தொட்டே வழக்கத்தில் உள்ள காதல் மொழி. அதற்கு தாங்களும் விதிவிலக்கு அல்ல என ஆபத்துக்கள் நிறைந்த ஆற்றை கடந்து காதலியை தேடி சென்றுள்ளது உகாண்டாவைச் சேர்ந்த 2 சிங்கங்கள்.
உகாண்டாவின் ராணி எலிசபெத் தேசிய பூங்காவில் அமைந்துள்ள காசிங்கா நதி, திரும்பிய பக்கமெல்லாம் முதலைகளும் காண்டாமிருகங்களும் நிறைந்தது. இந்த ஆபத்தான நதியை 45 நிமிடத்தில் நீந்திக் கடந்துள்ளது மூன்று கால் ஜேக்கப்பும் அதன் சகோதரரான திபுவும்.
பொதுவாக ஆபத்தான சூழ்நிலையைத் தவிர்த்து மற்ற சமயங்களில் சிங்கங்கள் தண்ணீரில் நீந்துவதை விரும்பாது என கூறப்படுகிறது. ஆனால், இப்படி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சிங்கங்கள் நீந்தி சென்றது இதுவே முதன்முறை என்று கூறுகிறார் ஜேக்கப்பை 8 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வரும் ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் பிராஸ்கோவ்ஸ்கி.
சிங்க இனங்கள் அழிந்துவருவதால் உருவாகி உள்ள மிகப்பெரிய பிரச்சனைக்கு இது ஒரு உதாரணம் என்றும் கூறுகிறார்கள் விலங்கு நல ஆர்வலர்கள். ஒரு ஆண் சிங்கத்துக்கு 2 பெண் சிங்கங்கள் இணையாக இருக்கும். ஆனால், மனித வேட்டையாடல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட அழிவால், ராணி எலிசபெத் தேசிய பூங்காவில் பெண் சிங்கங்களைவிட 2 மடங்கிற்கு அதிகமாக ஆண் சிங்கங்கள் உள்ளன.
மொத்தமுள்ள 40 சிங்கங்களில், இணையை தேர்ந்தெடுப்பதில் சக சிங்கக்கூட்டங்களுடன் நடந்த சண்டையில் ஜேக்கப், திபு தோற்றுப் போனதாக கூறப்படுகிறது. இதனால்தான் காதலியைத் தேடி வேறு இடத்துக்கு ஜேக்கப்பும் திபுவும் சென்றதாக ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் பிராஸ்கோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். தண்ணீரில் இருக்கும் போது சிங்கத்தை விட 4 மடங்கு அதிக பலம் கொண்ட முதலையிடம் இருந்து சிங்கங்கள் தப்பி கரை சேர்ந்த காட்சிகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:
டீத்தூளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் கண்டுபிடிப்பு… தேநீர் பிரியர்கள் அதிர்ச்சி!
இதுபோன்ற சவால்கள் ஜேக்கப்புக்கு புதிதில்லை என்றும் தெரிவித்துள்ளார் அலெக்ஸ். 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜேக்கப்பின் குடும்பத்தை விஷம் வைத்து வேட்டைக்காரர்கள் கொன்றுவிட்டனர். ஜேக்கப்பும் ஒரு இரும்பு பொறியில் சிக்கிய நிலையில், எருமை மாடுகளின் கூட்டத்தில் சிக்கி ஒரு காலை இழந்தது. இந்நிலையில் தான், இதுவரை எந்த சிங்கங்களும் செய்யாத சாதனையை புரிந்துள்ளது என்றும் ராணி எலிசபெத் தேசிய பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
