Last Updated:
ஹைதராபாத்தில் காதலியை கொலை செய்து சூட்கேஸில் உடலை வைத்த காதலன் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தில் காதலியை கொலை செய்து சூட்கேஸில் உடலை அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசிச் சென்ற காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் பாலாநகர் அருகே உள்ள பூச்சுபல்லி எனும் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் அனாதையாய் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வந்ததால், பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பாலாநகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த சூட்கேஸில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பெண்ணைக் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் நேபாளத்தைச் சேர்ந்த விஜய் தோஃபா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் தாரா பெஹாரா என்பதும், அவரை விஜய் தோஃபா தான் கொலை செய்திருப்பதும் உறுதியானது.
சமூக வலைத்தளம் மூலம் தாரா பெஹாராவுடன் விஜய் தோஃபாவிற்கு காதல் ஏற்பட்டு இருவரும் பழகி உள்ளனர். இதில் தாரா பெஹாராவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இருப்பினும், அவர்கள் இருவரும் நேபாளத்தை விட்டு வெளியேறி ஹைதராபாத்தில் குடிபுகுந்தனர்.
இந்நிலையில், தாரா பெஹாரா கர்ப்பமானார். ஆனால், தனக்கு குழந்தை வேண்டாம் எனவும், கருக்கலைப்பு செய்து கொள்ளப் போகிறேன் எனவும் கூறியுள்ளார். இதற்கு விஜய் தோஃபா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தாராவை, விஜய் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர், கட்பல்லி பகுதியில் பெரிய சூட்கேஸ் வாங்கி வந்து, அதில் தாராவின் சடலத்தை வைத்து பூச்சுபல்லியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் வைத்து விட்டு விஜய் தோஃபா தப்பித்துள்ளார். இதெல்லாம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் விஜய் தோஃபாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
June 08, 2025 2:30 PM IST


