Last Updated:
ஆந்திராவில் 17 வயது சிறுமி காதல் விவகாரத்தில் ஆணவக் கொலையால் உயிரிழந்தார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாளை இரவு சாப்பாட்டில் விஷம் வைத்து தன்னை கொல்ல திட்டம் போட்டு இருப்பதாக காதலனுக்கு வாட்ஸ் அப் மூலம் மைனர் காதலி தகவல் அளித்த நிலையில், மறுநாள் அந்த சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்துள்ள சந்திரகிரி தாலுகாவுக்கு உட்பட்ட சிறு கிராமம் மிட்டபாளையம். இந்த கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞரும் காதலித்துள்ளனர். காதலில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஆறு மாதத்திற்கு முன் அந்த சிறுமி கர்ப்பமானார். மைனர் மகளின் கர்ப்பத்தை அறிந்த பெற்றோர் ஒரு தனியார் மருத்துவமனையில் மகளை சேர்த்து கர்ப்பத்தை கலைத்துள்ளனர்.
இது பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சந்திரகிரி போலீசார், அஜயை பிடித்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்ட காதலனை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சென்று சந்தித்து பேசி இருக்கிறார் அந்த சிறுமி. மகளின் செயல் பற்றி அறிந்த பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிறுமியை கடுமையாக தாக்கி கண்டித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த சிறுமி சிறையில் உள்ள தன்னுடைய காதலனின் செல்போன் நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு பரபரப்பு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதில், “நாளை இரவு விஷம் வைத்து என்னை கொலை செய்ய திட்டம் போட்டு இருக்கிறார்கள். இந்த திட்டம் பற்றி என்னுடைய தாத்தாவும், தாயும் பேசி கொண்டதை யாரும் அறியாமல் ஓட்டு கேட்டேன்” என்று சிறுமி தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளி அன்று சிறுமி திடீரென்று மரணம் அடைந்து விட்டார். உயிரிழந்த சிறுமியின் உடலை, யாருக்கும் தெரியாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் பெற்றோர் எரித்து விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சந்திரகிரி போலீசார் சிறுமியின் தாய், தாத்தா ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, சிறையில் இருக்கும் தன்னுடைய காதலனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பிய மெசேஜ் பற்றிய தகவல்கள் இருந்துள்ளன.
எனவே சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து ஆணவக் கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறையில் இருக்கும் அஜயின் செல்போன் தற்போது யாரிடம் இருக்கிறது என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் சிறுமியை ஆணவக் கொலை செய்து, உடலை தீயிட்டு எரித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
April 10, 2025 4:43 PM IST
“சாப்பாட்டில் விஷம் வைத்துவிடுவார்கள்..” காதலனுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!


