வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவொரு அமைப்பும் அழைப்பு விடுக்கவில்லை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் நேற்று (28) வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கட்சி சார்பில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் இடம்பெறும் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிந்து நின்று போட்டியாகச் செயல்பட வேண்டாம்
அந்த கடிதத்தில், ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்பதை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்துவதோடு, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இதில் விரைந்து செயல்பட வேண்டும் எனக் கோருகின்றோம்.

இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
ஆனால், கட்சி நிர்வாகத்துடன் கலந்துரையாடி எந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவில்லை, மேலும் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை.
எனவே, எந்தவொரு அமைப்பும் நடத்தும் நிகழ்வில் கட்சி சார்பில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்ள தடையில்லை என்றாலும், இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


