கோலாலம்பூர்:
காஜாங், ஜாலான் பிரிமா சௌஜானா (Jalan Prima Saujana) பகுதியில் அமைந்துள்ள மின்சார துணை நிலையம் அருகே தம்பதியரிடையே ஏற்பட்ட வாக்குவாதக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து காஜாங் மாவட்டக் காவல் துறை தலைவர் துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த இடத்தில் எந்தவொரு உடல் ரீதியான தாக்குதலும் நடைபெறவில்லை என்றும், இது வெறும் வாய் தகராறு மட்டுமே என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்மணி, “என் கணவர் என்னை தாக்கவில்லை” என்று திட்டவட்டமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வதந்திகளைப் பரப்பி பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் காணும் காணொளிகளை முழுமையாக அறியாமல் பகிர வேண்டாம் என்றும், இதனால் தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தவிர்க்கலாம் என்றும் காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post காஜாங் தம்பதியர் வாக்குவாதம்: தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை எனப் போலீசார் திட்டவட்டம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

