காஜாங்:
நேற்றிரவு பண்டார் துன் ஹுசேன் ஆன், லெபோ உத்தாமாவில் (Lebuh Utama Bandar Tun Hussein Onn) உள்ள போக்குவரத்துச் சிக்னல் சந்திப்பில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 18 வயதுடைய ஏர்-கண்டிஷனர் (Air-cond) தொழில்நுட்பவியலாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் ஜாலான் சுவாடாமை (Jalan Suadamai) மற்றும் லெபோ உத்தாமா சந்திப்பில் நிகழ்ந்ததாகக் காஜாங் மாவட்ட போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, ஜாலான் சுவாடாமையிலிருந்து வந்த கார் ஒன்று சிக்னல் சந்திப்பிற்குள் நுழைந்தபோது, எதிர்த் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் பலமாக மோதியுள்ளது.
இந்த அதிவேக மோதலில் மோட்டார் சைக்கிளோட்டியான 18 வயது இளைஞர் கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த 67 வயது முதியவர் எவ்விதக் காயமுமின்றி தப்பினார்.
பலியான இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் செர்டாங் மருத்துவமனைக்கு (Hospital Serdang) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இச்சம்பவம் குறித்து, ஆபத்தான அல்லது அலட்சியமாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காகச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



