Last Updated:
கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 12 பேரை காசாவிற்கு உணவு எடுத்துச் சென்றபோது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்ற இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 12 பேரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு பக்கம் ராணுவ துப்பாக்கி குண்டுகள், பீரங்கி குண்டுகள், வான்வழித் தாக்குதலில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு வருகின்றனர். மறுபக்கம் உணவின்றி ஏராளமான மக்கள் காசாவில் சாவின் பிடியில் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில், இந்தியாவில் ரூ.5க்கு விற்கப்படும் ஒரு பிஸ்கட் பாக்கெட் காசாவில் ரூ.2,342 விற்பது தெரியவந்தது. அந்த அளவிற்கு அங்கு கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை, “பூமியிலேயே மிகவும் பசியுள்ள இடம் காசா” என்றும், “21 மாதப் போருக்குப் பிறகு காசாவில் உள்ள மக்கள் அனைவரும் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கிறார்கள்” எனவும் கூட எச்சரித்திருக்கிறது.
இந்த நிலையில், காசாவில் இருப்போருக்கு உணவுப் பொருட்கள் அளிப்பதற்கு பல்வேறு அமைப்புகள் முன்வந்தாலும், அந்த உணவுப் பொருட்கள் இஸ்ரேல் வழியாகத் தரை மார்க்கமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது. அதேசமயம், அந்த உணவுப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்துவதாகவும் புகார் எழுந்தது.
இந்தச் சூழலில், ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 12 பேர், தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கப்பலில் உணவுப் பொருட்களை காசாவுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது, நடுக்கடலில் அவர்களை இடைமறித்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 12 பேரையும் கைது செய்தனர்.
The “selfie yacht” carrying Greta Thunberg and the other so-called “celebrities” is continuing its journey toward an Israeli port.
Upon arrival, arrangements will be made for their return to their respective home countries. pic.twitter.com/iK1tTKHizA
— Israel Foreign Ministry (@IsraelMFA) June 9, 2025
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை தனது எக்ஸ் பக்கத்தில், “கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிரபலங்கள் எனச் சொல்லப்படுபவர்கள் வந்த கப்பல் இஸ்ரேல் துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அந்தக் கப்பல் துறைமுகத்தை அடைந்ததும், அதில் இருக்கும் 12 பேரும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
June 09, 2025 7:53 PM IST
காசாவில் கடுமையான பஞ்சம்… உணவு எடுத்துச் சென்ற கிரெட்டா துன்பெர்கை கைது செய்த இஸ்ரேல்


