Last Updated:
இமாச்சல பிரதேசம் மண்டியில் 19 வயது சியா குலேரியா கல்லூரிக்கு செல்லும் வழியில் ரிஷு பாட்டியால் அரிவாளால் கொலை, மக்கள் தாக்கிய குற்றவாளியை போலீஸ் கைது செய்தது
இமாச்சல பிரதேசத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
இமாச்சல பிரதேசம் மண்டி மாவட்டத்தில் கோபால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவரின் மகள் சியா குலேரியா சர்காகாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்றுள்ளார். தனியாக சென்ற மாணவியை, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த இளைஞர் ஒருவர் வழிமறித்துள்ளார்.
அதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த மாணவி, என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றுள்ளார். பைக்கில் இருந்து இறங்கிய நபர் திடீரென விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அரிவாளை எடுத்து மாணவியின் கையில் வெட்டியுள்ளார். தொடர்ந்து ஆவேசமாக மாணவியை தாக்கி கீழே தள்ளி துடிக்க துடிக்க கழுத்தை அறுத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மாணவி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்து தப்பியோட முயற்சித்த கொலைகாரனை ஊர்மக்கள் சுற்றிவளைத்த பிடித்துள்ளனர். பின்னர், இளைஞர்கள் சுற்றிவளைத்து அந்த நபரை ரவுண்டு கட்டி தாக்கினர். அப்படியும் ஆத்திரம் தீராமல் கம்பு, உருட்டுக் கட்டையால் வெளுத்தெடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து கொலைகாரனை போராடி மீட்டனர். விசாரணையில் அந்த நபர் கோபால்பூரைச் சேர்ந்த 32 வயதான ரிஷு பாட்டியால் என்பது தெரியவந்தது. ஆனால், மாணவியை கொடூரமாக கொலை செய்தற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விசாரணை முடிவில் தான் கொலைக்கான உண்மைக் காரணம் தெரியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கொலைகாரன் மதுபோதைக்கு அடிமையானவர் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். தனியாக சென்ற மாணவியிடம் அவர் அத்துமீற முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்து போராடிய மாணவியை கொடூரமாக கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தை உலுக்கிய சம்பவத்தில் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு உறுதியளித்துள்ளது.
Himachal Pradesh
கல்லூரிக்கு தனியாக நடந்து சென்ற 19 வயது மாணவி.. வழியில் நடந்த கொடூரம்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்!


