Last Updated:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சர்வசாதாரணமாக கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அதை ஆமோதிக்கும் வகையில், நீதிமன்றம் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் இந்தியருக்கு சொந்தமான நகைக் கடைக்குள் புகுந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெயருக்கு 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் மொத்த கும்பலும் கூண்டோடு சிக்குமா?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சர்வசாதாரணமாக கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அதை ஆமோதிக்கும் வகையில், நீதிமன்றம் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவம் நிகழ்ந்து 9 மாதங்கள் கடந்தபோதும், போலீசார் துரித நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கு நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் நடந்தது என்ன?
கலிபோர்னியாவில் ஃப்ரீமாண்டில் குமார் என்ற பெயரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அமெரிக்க வாழ் இந்தியருக்கு சொந்தமான இந்தக் கடைக்கு, கடந்த 2015 ஜூன் மாதம் 18ஆம் தேதி ஒரு கும்பல் வந்துள்ளது. சினிமா பாணியில் முகமூடி அணிந்துவந்த 20-க்கும் மேற்பட்டோர் திபுதிபுவென உள்ளே புகுந்துள்ளனர். கடைக்குள் நுழைந்ததும் சுத்தியல் மற்றும் சிறிய ரக கோடாரி போன்ற ஆயதங்களைப் பயன்படுத்தி நகைப்பெட்டிகளை உடைத்தெறிந்தனர். பின்னர், உள்ளே இருந்து தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை பைக்குள் அடைத்தனர். ஒரு நிமிடத்திற்குள் மொத்த கடையையும் வாரிச் சுருட்டிக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அடுத்த கணமே வெளியே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் ஏறி, மின்னல் வேகத்தில் நாலாபுறமும் தப்பியோடினர். இது தொடர்பான விசாரணையில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கடையில் இருந்த மொத்த நகைகளில், 80 சதவீதம் கொள்ளையடிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், கொள்ளையர்கள் பயன்படுத்தியது திருட்டுக் கார் என்பதால் அவர்களை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்த கும்பலில் பெண்கள் சிலரும் இருந்தது பின்னர் தெரியவந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார் சந்தேகத்தின்பேரில் 19 முதல் 20 வயதிற்கு உட்பட்ட 4 இளைஞர்களை மட்டுமே கைது செய்தனர். எஞ்சிய நபர்களை போலீசாரால் நெருக்கக்கூட முடியவில்லை. கலிபோர்னியாவில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், 9 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட மொத்த கும்பலையும் கைது செய்யாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் சிசிடிவி காட்சியை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தை தடுக்கும் நோக்கில் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.


