Last Updated:
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, சித்தராமையாவுக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
பேஸ்புக்கில் ஆட்டோமேட்டிக்காக மொழிபெயர்க்கும் அமைப்பால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87-வது வயதில் கடந்த 14ஆம் தேதி காலமானார். அவருக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகும். அவரது மறைவைத் தொடர்ந்து சரோஜாதேவியின் உடலுக்கு ஏராளமான விஐபிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ் திரையுலகில் நடிகர்கள் அர்ஜுன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சரோஜாதேவியின் உடல் பெங்களூரு ராம் நகரில் கடந்த 15 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே சரோஜாதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார்.
அதாவது கன்னடத்தில் இந்த தகவல், நடிகை சரோஜாதேவி உடலுக்கு முதலமைச்சர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பேஸ்புக் தானியங்கி முறையில் ஆங்கிலத்தில், முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார் என ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது.
இது குறித்த தகவல்கள் காட்டுத்தீயாய் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, சித்தராமையாவுக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
July 18, 2025 8:43 PM IST


