Last Updated:
பட்டப்பகலில், துப்பாக்கி முனையில் நகைக்கடையில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஹெல்மெட் அணிந்துவந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தின் பின்னணி என்ன?
நீங்கள் எல்லாம் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அதே சம்பவத்தை லைவாக டெமோ காட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதுபோல, கொள்ளையடிப்பதை ஏதோ கொசு விரட்டுவதுபோல் கைத்துப்பாக்கியை எடுத்துவந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மர்ம நபர்கள்.
தலையில் ஹெல்மெட், குரங்கு குல்லா, கையில் ஒரு துப்பாக்கி. அவ்வளவுதான் இவர்களது முதலீடு. மொத்தமாக ஒரு நகைக்கடையை துடைத்தெடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். கேஷ்வலாக கொள்ளையடித்துவிட்டு கேள்வி கேட்பாரின்றி தப்பிச்சென்ற குற்றவாளிகள் சிக்குவார்களா?
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் தான் அந்த சிறிய நகைக்கடை அமைந்துள்ளது. வழக்கம் போல் கடையைத் திறந்து வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருந்த கடை உரிமையாளருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ஏனெனில், பைக்கில்வந்த இருவர் வாடிக்கையாளர்கள் போல் நடந்துவந்து பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து முகத்துக்கு நேராக நீட்டியிருக்கின்றனர். ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். மற்றொருவர் குரங்கு குல்லா அணிந்திருந்தார். இருவரும் கொள்ளையடிக்க வந்தவர்கள் என்பதை உணர்ந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார் கடை உரிமையாளர்.
மரியாதையாக நகைகளை எடுத்துக் கொடுத்துவிட்டால் உயிராவது மிஞ்சும் என அவர்கள் மிரட்டி வேறு வழியின்றி நகைகள் அடங்கிய பெட்டிகளை வரிசையாக எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவற்றை நோகாமல் வாங்கி பைக்குள் திணித்துக் கொண்ட அவர்கள், போகிற போக்கில் அந்த வழியாக வந்த பெண் ஒருவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி செயின் பறித்துச் சென்றுள்ளனர்.
பட்டப்பகலில், துப்பாக்கி முனையில் நகைக்கடையில் அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா: ஹெட்மெட் அணிந்துவந்து நகை கொள்ளை… சினிமா காட்சிகளை மிஞ்சும் சம்பவத்தின் பின்னணி என்ன…?


