Last Updated:
நாட்டின் முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்று கான்ஃபிடன்ட் குரூப். (Confident Group) 19 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்தக் குழுமம் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவில் பல வணிக நடவடிக்கைகளைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமாகும்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத் தலைவர் சி.ஜே.ராய் தன்னைத்தானே மார்பில் சுட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்றுவந்த சூழலில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன?
நாட்டின் முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்று கான்ஃபிடன்ட் குரூப். (Confident Group) 19 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்தக் குழுமம் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவில் பல வணிக நடவடிக்கைகளைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் பெங்களூரு, கேரளா மற்றும் துபாயில் பல ரியல் எஸ்டேட் திட்டங்களை வடிவமைத்து வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் பெங்களூரு கிளைக்கு இரண்டு வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ராயின் அலுவலகத்தை சோதனை செய்தனர். இந்த சோதனையையொட்டி போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். பெங்களூருவில் உள்ள அவரது சொத்துக்களிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நண்பகலில் அலுவலகத்திற்கு வந்த ராய், சில மணிநேரங்களுக்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத சூழலில் தன்னைத்தானே மார்பில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் ஒரு மணி நேரம் ஐடி அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
வருமான வரித்துறை சோதனைகளின் அழுத்தம்தான் இந்த தற்கொலைக்கு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவத்திற்குப் பிறகு, ராயின் ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, ராயின் குடும்பம் பல வணிக நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. ராய் பல வழக்குகளை எதிர்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ராய் தனது அணுகுமுறையாலும், தன்மையான பேச்சுக்களாலும், பொது உரையாடல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலமும் தனது வெற்றிக் கதையைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவர். அவர் சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்.


