கர்நாடகாவை கொஞ்சம் பாருங்க! விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த அன்புமணி ராமதாஸ்!
தொடர்ச்சியாக நடக்கும் பணிநீக்க சூழலுக்கு மத்தியில், தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வருகின்ற 2027-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழகத்தில் காலியாக இருக்கும் 1,50,000 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக வெள்ளிக்கிழமை அன்று ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். அதில் தமிழகத்தில் படித்த ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு பிரச்சனைகளுக்கு கர்நாடகா அரசை உதாரணமாக கூறிய அன்புமணி ராமதாஸ்.. அரசு துறைகளில் காலியாக இருக்கும் 72,186 பணியிடங்களை அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் நிரப்புமாறு அம்மாநிலத்தின் முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவின் பெயரில் 15 வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பும் கர்நாடகாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள இளைஞர்களுக்கு உண்மையிலேயே நிம்மதி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. இதுபோன்ற அறிவிப்புகள் தமிழகத்திலும் வெளியாக வேண்டும்.
கர்நாடக அரசைப் போல பணி நியமனங்களில் தமிழக அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு பணியிடங்கள் வேகமாக நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் வந்த பிறகு அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், தமிழகத்தில் தற்போது அரசு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: 2021-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அரசு வேலை வாய்ப்பு தொடர்பாக பல வாக்குறுதிகளை வழங்கியது. அப்போது தமிழகத்தில் காலியாக இருந்த 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் அதற்கு ஏற்ப நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 50000 வேலை வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. திமுக வாக்குறுதி அளித்த அதே காலகட்டத்தில் பல ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது உண்மையிலேயே தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதை சமாளிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் அரசு அதற்கு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

