Last Updated:
வாட்ஸ்அப் குழு நிர்வாகியான முஷ்டாக் அகமது, குறிப்பிட்ட ஒரு குழுவிலிருந்து தன்னை நீக்கியதால் கோபமடைந்த மற்றொரு பாகிஸ்தானிய நபரான அஷ்ஃபாக் கான் துப்பாக்கியால் சுட்டு அவரை கொன்றுள்ளார்.
இப்போதெல்லாம் மக்கள் சிறிய விஷயங்களுக்கு கூட கோபத்தில் கொலை செய்யும் அளவிற்கு சென்று விடுகிறார்கள். பாகிஸ்தான் நாட்டில் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் சமீபத்தில் முஷ்டாக் அகமது என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.
ஆனால் இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் தான் நம்மை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இறந்த முஷ்டாக் அகமது என்பவர் ஒரு வாட்ஸ்அப் குரூப்பின் அட்மினாக செயல்பட்டு வந்தார். அந்த வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து ஒருவரை நீக்கியது தான் இவர் செய்த தவறு, இதற்காக தான் அவர் சுட்டு கொல்லப்பட்டார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
ஆனால் இது தான் உண்மை.. வாட்ஸ்அப் குழு நிர்வாகியான முஷ்டாக் அகமது, குறிப்பிட்ட ஒரு குழுவிலிருந்து தன்னை நீக்கியதால் கோபமடைந்த மற்றொரு பாகிஸ்தானிய நபரான அஷ்ஃபாக் கான் துப்பாக்கியால் சுட்டு அவரை கொன்றுள்ளார். இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை தொடர்ந்து ஒருகட்டத்தில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்த பின்னர் அஷ்ஃபாக் கானை, வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து நீக்கியுள்ளார் முஷ்டாக் அகமது. தன்னை வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து நீக்கியதால் முஷ்டாக் அகமது மீது கடும் கோபம் அடைந்த அஷ்ஃபாக் கான், நேரில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் முஷ்டாக் அகமது சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இறந்தவரின் சகோதரரா ஹுமாயூன் கான் என்பவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்ததாக அரபு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். “கொல்லப்பட்ட எனது சகோதரர் முஷ்டாக் மற்றும் அஷ்ஃபாக் ஆகியோர் குறிப்பிட்ட ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருந்தனர், அதன் அட்மினாக எனது சகோதரர் இருந்தார். இதனிடையே குறிப்பிட்ட வாட்ஸ்அப் குரூப்பில் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருந்தது, இதனால் அஷ்ஃபாக்-ஐ குரூப்பில் இருந்து நீக்கினார் முஷ்டாக் . இதனால் அஷ்பக் கோபமடைந்து என் சகோதரனை சுட்டு கொன்றார்,” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ஹுமாயூன் இந்த துயர சம்பவத்திற்கு முன்பு குடும்பத்திற்கு இந்த தகராறு குறித்து தெரியாது. உண்மையில் இது ஒரு பிரச்சனையே அல்ல, மிகவும் அற்பமான விஷயம். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இந்த தகராறு பற்றி துளியும் தெரியாது என்று கூறினார். உள்ளூர் காவல்துறை அதிகாரி அபித் கான் பேசுகையில் கொல்லப்பட்டவரின் சகோதரர் புகார் அளித்ததாக தெரிவித்தார். காவல்துறை அறிக்கையின்படி, இரு தரப்பினரும் பிரச்சனையை பேசி தீர்க்க முயன்றபோது, அஷ்ஃபாக் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி அகமதுவை கொன்று விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார், போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சோஷியல் மீடியாக்களில் கடும் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது, பலர் அதிர்ச்சியூட்டும் இந்த வழக்கு குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: உலகின் வயதான பார்பர்: கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த 108 வயதுடைய ஜப்பானியப் பெண்…!
ஒரு யூஸர் கூறுகையில், “இதுபோன்ற வழக்குகளுக்குப் பின்னால் போட்டி, துரோகம் மற்றும் இரு தரப்பிலும் தனிப்பட்ட பகைமை என எப்போதும் ஒரு நீண்ட கதை இருக்கும். வாட்ஸ்அப்பில் இருந்து நீக்கப்படுவது போன்ற சிறிய சம்பவங்கள், ஒரு துயரச் சம்பவம் நடப்பதற்கு காரணமாக மாறும். எனவே இவை அனைத்தும் வாட்ஸ்அப்பால் நடந்தது போல் தோன்றலாம்.”என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு யூஸர்”மிகச் சிறிய விஷயங்களுக்காக கூட மக்கள் ஒருவரையொருவர் கொல்ல நினைக்கிறார்கள். போலீஸ் சட்டம் மற்றும் தண்டனைகளுக்கு பயப்படுவதில்லை.” என்றார். வேறு சில யூஸர்கள் இந்த சம்பவத்தை “மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்றும், “இதை யோசித்தால் மிகவும் பயமாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
March 15, 2025 10:14 AM IST
கருத்து வேறுபாடு காரணமாக வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கிய அட்மினை சுட்டு கொன்ற நபர்.. அதிர்ச்சி சம்பவம்!


