Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இந்திய அணியின் இயக்குநர் பதவிக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில், என்சிஏ இயக்குநரான விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியின் இயக்குநராகவும்செயல்பட இருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்ட நாள் முதலே, இந்திய அணி மோசமான தோல்விகளை அடைந்து வருகிறது. ஏற்கனவே சொந்த மண்ணில் இந்திய அணி 2 டெஸ்ட் தொடர்களை இழந்துவிட்டது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியால் முன்னேற முடியுமா என்ற கேள்வி உள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்தே யோசிக்க முடியும். இதனிடையே தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருக்கிறது. பெரும்பாலும் அஜித் அகர்கரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படும் என்றே சொல்லப்படுகிறது.
இதனிடையே இந்திய டெஸ்ட் அணியின் செயல்பாடுகளை அதிகரிக்க பிசிசிஐ ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவிக்கு விவிஎஸ் லக்ஷ்மணை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய அணியின் இயக்குநர் பதவி என்பது தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவருக்கும் மேலான அதிகாரம் கொண்ட பதவியாகும்.
ஏற்கனவே 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணி இயக்குநராக ரவி சாஸ்திரி இருந்திருக்கிறார். அந்த பதவிக்கு விவிஎஸ் லக்ஷ்மண் கொண்டு வரப்படும் போது கவுதம் கம்பீரின் அதிகாரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க முடியும். அதேபோல் தோல்விக்கான காரணங்கள் குறித்து நேரடியாக கேள்வி எழுப்ப முடியும்.
முன்னதாக பயிற்சியாளர் பதவிக்கு விவிஎஸ் லக்ஷ்மணை தான் பிசிசிஐ அணுகியது. ஆனால் என்சிஏ இயக்குநர் பதவியில் இருக்க விவிஎஸ் லக்ஷ்மண் விரும்பியதால், பயிற்சியாளர் ஆஃபரை நிராகரித்தார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சொதப்பி வருவதால், விவிஎஸ் லக்ஷ்மண் மீண்டு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.

