கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை.. இனி வெங்காயமே இல்லாமதான் சமைக்கணும்!
இந்திய குடும்பங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சமையல்களில் வெங்காயம் பயன்படுவதால் தினசரி அடிப்படையில் இதற்கு தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தின் காரணமாக மத்திய அரசு ஸ்டாக்கில் உள்ள வெங்காயத்தை முக்கிய நகரங்களுக்கு அனுப்பத் துவங்கியுள்ளது.
சமீபத்தில் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் சில தரவுகளை வெளியிட்டது. அதில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 42 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த விலை சுமார் 45 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதத்தை விட 19 சதவீதம் அதிகமாகும்.

சென்னையில் 2025-ஆம் ஆண்டு இதே மாதத்தில் கிலோ ஒன்று 33 ரூபாயாக இருந்த நிலையில்.. தற்போது கிலோ ஒன்று ரூ.58 வரையில் விற்பனையாகி வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் எல்லாம் இந்த விலையேற்றம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.
ஆகஸ்ட் 18-ஆம் தேதி மொத்த விற்பனை கடைகளில் வெங்காயத்தின் சராசரி விலை குண்டால் ஒன்று ரூ.2,897.64 ஆக இருந்தது. அதிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட இந்த விலை சுமார் 31.93% அதிகம். கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் 118.37% வரை வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
பொதுவாக ஒரு பொருளின் விலை அதிகரிக்க இரண்டு காரணம் இருக்கும். ஒன்று வரத்து குறைபாடு மற்றொன்று சீரற்ற காலநிலை. தற்போது இந்தியாவில் வெங்காய விநியோகம் பாதிக்கப்பட்டதற்கும் இதுவே காரணமாகும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படும் வெங்காயம் தான் கிட்டத்தட்ட அக்டோபர் மாதம் வரை விநியோகம் செய்யப்படும்.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடுமையான மழை பெய்ததால் கிடங்குகளில் சேமித்து வைத்திருந்த வெங்காயத்தின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவும் விலை அதிகரிப்புக்கு காரணமாக கிரிசில் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. வெங்காயம் பல மாநிலங்களில் இருந்து இந்தியா வருகிறது. அந்த வகையில் ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் பகுதியில் இருந்து வழக்கமாக வரும் வெங்காயம் இந்த முறை வரவில்லை. அங்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஜூன் மாதம் 25 ரூபாயாக இருந்த வெங்காயத்தின் விலை ஆகஸ்ட்டில் ரூ.50 முதல் ரூ.60-ஆக அதிகரித்துள்ளது.
வெங்காயத் தட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு எண்ணற்ற முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் அதற்கான செலவுகள் சற்று அதிகமாக இருக்கிறது. நாசிக் சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் அரசு குறைந்த பட்ச கொள்முதல் விலையை ரூ.12.70-லிருந்து ரூ.26.40 வரை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேபோல குறைந்தபட்ச கொள்முதல் விலையை பலமுறை அதிகரித்தும் 2 லட்சம் டன் வெங்காயத்தை பெறுவது இன்னும் பிரச்னையாகவே இருக்கிறது.
இதை கட்டுப்படுத்த நாசிக்கில் இருந்து கந்தா எக்ஸ்பிரஸ் போன்ற சிறப்பு ரயில்கள் மூலம் டெல்லி, சென்னை, கொச்சி மற்றும் கௌகாத்தி போன்ற முக்கியமான நகரங்களுக்கு வெங்காயம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்திய குடும்பங்களில் காரசாரமான கார குழம்பு தொடங்கி சாம்பார் வரை அனைத்திலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் இந்த தட்டுப்பாட்டை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

