Last Updated:
லக்னோவில், காவலர் அனுராக் சிங்கின் மனைவி சவும்யா காஷ்யப் தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், காவலரின் மனைவி ஒருவர் கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டு விட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பக்ஷிகா தலாப் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் அனுராக் சிங். இவரது மனைவி சவும்யா காஷ்யப். இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவும்யாவின் உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
சவும்யா தற்கொலை செய்வதற்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். தூக்கு கயிறு முன்பு கதறி அழுதபடி அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோவில், “எனது கணவர் அனுராக் சிங் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அதற்கு எனது மாமியார் எனது கணவரை வற்புறுத்துகிறார். எனது மைத்துனர் சஞ்சய் காவல் துறையில் பணியாற்றுகிறார். அவர் என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். எனது கணவரின் மாமா ரஞ்சித் என்பவர் வழக்கறிஞராக உள்ளார். அவர் என்னை கொன்றுவிடும்படி எனது கணவரிடம் வலியுறுத்துகிறார். வழக்கை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ உனது மனைவியை கொன்று விடு என எனது கணவரிடம் கூறுகிறார்.” என அழுதபடி அந்த வீடியோவில் சவுமியா கூறியுள்ளார்.
தனது கணவர் குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து சித்ரவதை செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர் என்றும், இவர்கள் பணம் மற்றும் அதிகாரத்தால் எதையும் செய்யக்கூடியவர்கள் என்றும் இன்று நான் உயிரிழந்தால் அதற்கு இவர்கள் தான் பொறுப்பு என்றும் கண்ணீருடன் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வரைலானதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ள போலீசார் அவர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
July 28, 2025 7:50 PM IST
கணவர் குடும்பத்தினர் கொடுமை.. மனைவி எடுத்த விபரீத முடிவு.. வாக்குமூலம் அளித்த வீடியோவால் வந்த சிக்கல்!


