மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்ட காவல்துறைக்கு கடந்த 13ஆம் தேதி காலை ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், இந்தூர் – இச்சாபுர் சாலையில் உள்ள ஐடிஐ கல்லூரி எதிரே உள்ள புதரில் ஒரு ஆணின் சடலம் கிடக்கிறது என தகவல் கொடுத்துள்ளார். இந்தத் தகவலை அடுத்து காவல்துறையினர் சடலம் கிடந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு புதரின் இடையே இளம் வயது ஆணின் சடலம் முழுக்க 36 வெட்டுக்காயங்களுடனும், ரத்தத்துடன் கிடந்ததை கண்டனர். இதனைத்தொடர்ந்து அந்த உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இந்த மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதையும் படியுங்கள் : ஒரு பல்லியின் விலை ரூ.60 லட்சம்.. விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படும் உயிரினங்கள் கடத்தல்.. அசாமில் அதிர்ச்சி சம்பவம்!
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இறந்திருப்பது புர்ஹான்பூர் மாவட்டம், ஷாஹ்புர் பகுதியைச் சேர்ந்த ராமசந்திர பாண்டேவின் மகன் ராகுல் என்பதை கண்டறிந்தனர். மேலும், அவருக்கு சமீபத்தில் 17 வயது சிறுமியுடன் திருமணம் நடந்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க காவல்துறையினர், ராகுலின் மனைவியை தேடியுள்ளனர். ஆனால், அவர் காணாமல் போயிருந்தார்.
இதனால், காவல்துறையினர் ராகுலின் மனைவி குறித்து விசாரிக்கத் துவங்கினர். அந்த விசாரணையில், ராகுலின் மனைவி சம்வம் நடந்த 12ஆம் தேதி இரவில் இருந்து காணாமல் போனதை கண்டறிந்தனர். மேலும், அவருக்கு யுவராஜ் எனும் காதலன் இருப்பதையும் கண்டறிந்தனர். உடனடியாக ராகுல் மனைவியின் காதலன் யுவராஜை கஸ்டடிக்குள் கொண்டுவந்த காவல்துறையினர் அவரிடம் தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில், யுவராஜ் பல அதிர்ச்சி தகவல்களை கொடுத்துள்ளார். காவல்துறை விசாரணையில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கும், ராகுலின் மனைவிக்கும் இடையே உறவு இருந்தது. இருவரும் இணைந்து ராகுலை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி கடந்த 12ஆம் தேதி ராகுலின் மனைவி தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ராகுலை கொலை செய்தார். கொலை செய்துவிட்டு, எனக்கு வீடியோ கால் செய்து ராகுலின் சடலத்தைக் காட்டினார்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுமியை குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரித்தபோது, “கொலை சம்பவம் முடிந்ததும், அவரும், அவரது நண்பர்களான லலித் மற்றும் ஒரு சிறுவன் இருவரும் உஜ்ஜைனுக்குப் புறப்பட்டு சென்றுவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் உஜ்ஜைனில் ராகுலின் மனைவியையும் அவரது கூட்டாளிகள் இருவரையும் தீவிரமாக தேடி அவர்கள் மூவரையும் பிடித்துள்ளனர். பிறகு ராகுலின் மனைவியிடம் போலீஸார் விசாரணையைத் துவங்கினர். அந்த விசாரணையில், அவர் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
காவல்துறை விசாரணையில், ராகுலின் மனைவி கூறியதாவது, “கடந்த 12ஆம் தேதி ராகுலை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி அன்று இரவு அவரிடம் அன்பாகப் பேசி, கடைக்கு அழைத்துச் சென்றேன். பின் வீடு திரும்பும்போது சாலையோர உணவகத்தில் இருவரும் உணவருந்தினோம். அங்கு ஏற்கனவே திட்டமிட்டப்படி லலித் மற்றும் சிறுவன் இருவரும் காத்திருந்தனர். நாங்கள் உணவு அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டதும், அவர்கள் இருவரும் எங்களைப் பின் தொடர்ந்து வந்தனர்.
பின் திட்டமிட்டப்படி ஐடிஐ கல்லூரி அருகே வந்தபோது, அங்கிருந்து வேகத்தடையில் வண்டி ஏறி இறங்கியபோது எனது காலணியை சாலையில் தவறவிட்டு, அதனை ராகுலிடம் கூறினேன். உடனே அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு, காலணியை எடுக்கச் சொன்னார். அப்போது எங்களைப் பின் தொடர்ந்து வந்த லலித் மற்றும் அந்த சிறுவர் இருவரும் ராகுலை தங்கள் கையில் இருந்து மது பாட்டிலை கொண்டு தாக்கினர். நானும் அவர்களுடன் சேர்ந்து ஒரு மது பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்தேன்.
அதில், ராகுல் நிலைகுலைந்து கீழே விழுந்து மயங்கினார். பின்னர் என்னிடம் இருந்து மது பாட்டிலை உடைத்து அவரது உடலில் பல இடங்களில் கிழித்தேன். பின் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த ராகுலை, யுவராஜுக்கு வீடியோ கால் செய்து காட்டினேன். பின் நான், லலித் மற்றும் சிறுவன் ஆகிய மூவரும் ரயில் ஏறி உஜ்ஜைனுக்குத் தப்பி சென்றோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தற்போது காவல்துறையினர் யுவராஜ் (20), லலித் (20), ராகுலின் மனைவியான 17வயது சிறுமி மற்றும் ஒரு சிறுவன் ஆகிய நான்கு நபர்களைக் கைது செய்துள்ளனர்.
April 18, 2025 4:10 PM IST
பீர் பாட்டிலால் கணவனை 36 இடங்களில் கிழித்து கொன்ற மனைவி.. காதலன் தந்த க்ளூ.. காவல்துறையை அதிரவைத்த வாக்குமூலம்!

