Last Updated:
அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தான் தம்பதிகள், புதுமணப்பெண், ஜேமி ரே மீக், நந்தோய் சர்மா, கிளிவ் குந்தர் ஆகியோர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார். 68 வயதான அவர், குஜராத் முதலமைச்சராக 2016 முதல் 2021 வரையில் பொறுப்பு வகித்தார். லண்டனில் தனது மகளுடன் வசித்து வரும் மனைவியை குஜராத் அழைத்து வருவதற்காக விமானத்தில் பயணித்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
முன்னதாக, விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளன. விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதிக் ஜோஷி லண்டனில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி கோமி வியாஸ் (Komi Vyas) ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார். இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகள் இருந்தனர். லண்டனுக்கு குடிபெயரும் விதமாக கோமி வியாஸ் தனது மருத்துவப் பணியை துறந்துவிட்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் விமானத்தில் புறப்பட்டபோது இந்த விபத்து நேரிட்டது.
அதேபோல திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாகக் கணவரைச் சந்திக்கவிருந்த புதுமணப்பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயதான குஷ்புவுக்கு விபுல் என்ற மருத்துவருடன் கடந்த ஜனவரியில் திருமணம் நடைபெற்ற நிலையில் கணவர் லண்டன் சென்றார். பாஸ்போர்ட் பெறப்பட்டதைத் தொடர்ந்து கணவருடன் சேர்ந்து வாழ லண்டன் புறப்பட்ட குஷ்பு இந்த விமான விபத்தில் மரணமடைந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஜேமி ரே மீக் (Jamie Ray Meek) இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் கடைசியாக அகமதாபாத் விமான நிலையத்தில் தனது நண்பருடன் அமர்ந்தபடி இந்தியாவிற்கு குட் பை சொன்ன வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, அவர்கள் இருவரும் சிரித்த முகத்துடனும் வீடியோ எடுத்துள்ளனர்.இந்த பூமிக்கே குட்பை சொல்லிவிட்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது
மணிப்பூரை சேர்ந்த 22 வயதான விமானப் பணிப்பெண் நந்தோய் சர்மா(Nganthoi Sharma) விமான விபத்தில் உயிரிழந்தார். இதனைக் கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை உருகச்செய்தது. விமான விபத்தில் பாலிவுட் நடிகர் விக்ரந்த் மேஸ்ஸியின் உறவினரும், துணை விமானியுமான கிளிவ் குந்தர் (Clive Kunder) உயிரிழந்தார். இதனை விக்ரந்த் மாஸ்ஸி உறுதி செய்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தை தவறவிட்டதன் மூலம் பெண்மணி ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பூமி சவுகான் (Bhoomi Chauhan) கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த பூமி சவுகான் விபத்துக்குள்ளான விமானத்தில் புறப்பட்ட இருந்தார். போக்குவரத்து நெரிசலால் 10 நிமிடங்கள் தாமதமாகப் போய் விமானத்தை தவறவிட்டார். தனது உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்வதாக பூமி சவுகான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Ahmedabad,Gujarat
June 13, 2025 9:56 AM IST


