பிகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.
இதற்கிடையில், தேர்தல் ஆணையம் அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டது. இதில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த இரு விவகாரங்களும் பெரும் கவனம் பெற்றதை அடுத்து, ராகுல் காந்தி பிகார் மாநிலத்தில் வாக்கு அதிகாரப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார். இதில், ராஷ்ட்ரிய ஜனதாதள் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில், பிகார் மாநிலம், தர்பங்காவில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்த மேடை மீது ஏறி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாய் குறித்தும் இழிவான சொற்களை பயன்படுத்தி கோஷம் எழுப்பியதாக சொல்லப்பட்டு வருகிறது.
இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், காங்கிரஸின் அரசியல் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. ஒரு ஏழைத் தாயின் மகன் கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் அமர்ந்து, தனது தலைமையால் நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பிகாரில் காங்கிரஸ் – பாஜக
தொண்டர்கள் மாறி மாறி தாக்குதல்காங்கிரஸ் பேரணியில் பிரதமர் குறித்து அவதூறாக முழக்கமிட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் அலுவலகம் முன்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தியபோது இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர் #Bihar #Congress #BJP #News18Tamilnadu… pic.twitter.com/yLDGw4RLQQ
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 29, 2025
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை கண்டித்து பாஜகவினர் இன்று பிகார் காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் பாஜகவினர் காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர்.
அப்போது காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர், கை கலப்பானது. இதில் இரு கட்சியினரும் மாறி மாறி கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்.
உடனே சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் இரு கட்சியினரையும் தடுத்து நிறுத்தி மோதலை முடிவுக்கு கொண்டுவந்தனர். மேலும், காயப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு கட்சியினர் மீது காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
August 29, 2025 3:22 PM IST

